அரசர்களின் காலத்தில் ஆநிரை கவர்தல் என்னும் சாகசம் அடிக்கடி நிகழ்ந்ததுண்டு. ஆநிரை கவர்தல் என்பது ஒரு போருக்கான அறைகூவல். ஒரு படை அடுத்த நாட்டின் எல்லைக்குள் புகுந்து, அங்கு வளர்க்கப்படும் பசுக்களை கூட்டம்கூட்டமாக கவர்ந்துகொண்டு வந்துவிடுவதும் அதை அவமானமாகக் கருதிய அந்த நாட்டு அரசன் தனது படைகளுடன் சென்று போரிட்டு, மீட்டுக்கொண்டு வருவதும் அக்காலத்தில் வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது. பசுக்களைமட்டுமல்ல, அவை மேயும் மேய்ச்சல் நிலங்களை அழிப்பதும் அவை நீரருந்தும் நீர்நிலைகளைச் சிதைப்பதும் கூட போருக்கான அறைகூவல்கள். மேய்ச்சல் சமூகத்துக்கு பசுக்கள் மாபெரும் செல்வம். அவற்றைத் தக்கவைக்க தொடர்ந்து போரிட்டபடியே இருந்தார்கள் மக்கள்.