மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தொண்டை மண்டலத்துக்கும் சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை நடுநாடு என்று பெயரிட்டு அழைத்தார்கள். தெற்கே வெள்ளாறு. வடக்கே தென்பெண்ணை. கிழக்கே வங்கக்கடல். மேற்கே திருவண்ணாமலை. இவற்றை உத்தேசமான எல்லைப்பகுதிகள் என்று ஒரு கோட்டை இழுத்துக்கொள்ளலாம். கரிசல் தமிழ், குமரித்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் போல நடுநாட்டில் புழங்கிய தமிழ் நடுநாட்டுத்தமிழ் என்று அழைக்கப்பட்டது. எல்லா வட்டாரங்களிலும் தனித்துவமான வழக்குச்சொற்கள் அமைந்திருப்பதுபோல, நடுநாட்டு வட்டாரத்திலும் தனித்துவமான வழக்குச்சொற்களும் மரபுத்தொடர்களும் அமைந்திருக்கின்றன.