கோவில்
வழிபாட்டையும் வைதிகச்சடங்கு முறைகளையும்
சாராத ஒரு புதுவிதமான
வழிபாட்டுமுறையையும் பக்தி
முறையையும் இந்த உலகுக்களித்தவர் பசவண்ணர். ஒவ்வொரு
பக்தனும் தன் உடலையே
கோவிலாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது
அவர் வழி. கொல்லாமை,
பொய்சொல்லாமை, தீய செயல்களில்
ஈடுபடாமை போன்ற பழக்கவழக்கங்களால் தம்மைத்தாமே தூய்மை
செய்துகொள்ளும் முறைகளை இடைவிடாமல்
பயிற்சி செய்யவேண்டும். தன்னை
சிவபக்தன் என இந்த
உலகுக்கு உணர்த்தும் விதமாக
மிகச்சிறிய லிங்கமொன்றை எப்போதும்
அணிந்திருக்கவேண்டும். இடைவிடாமல் இப்பயிற்சிகளைப் பின்பற்றும்போது, சாதி
வேறுபாடுகளையும் பால்
வேறுபாடுகளையும் கடந்து
ஒவ்வொரு பக்தனும் சிவனுக்கு
அருகில் இருக்கும் உணர்வைப்
பெறமுடியும். அவன் உள்ளமும்
உடலும் சிவன் உறையும்
இடமாக மாற்றமடையும். இத்தகு
கொள்கைகளின் அடிப்படையில் புதியதொரு
சமுதாயத்தை உருவாக்க முயற்சி
செய்தவர் பசவண்ணர்.