வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பைத் தேடி சிற்றூரிலிருந்து பெருநகரைநோக்கி வந்த இரண்டு நண்பர்களைப்பற்றிய கதையாக விரிவடைந்திருக்கிறது பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’. தொட்டதும் அல்லது தட்டியதும் திறந்துவிடும் கதவுகளாக வாய்ப்புகள் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தவமாய்த் தவமிருந்து ஒரு கதவின் திறத்தலுக்காக காலம் முழுக்க அலைய வேண்டியிருக்கிறது. செல்லும் இடங்களிலெல்லாம் மூடிய கதவுகளையே கண்டுகண்டு மனம் சலித்துப் போகிறவர்கள் உண்டு. எப்போதோ ஒருமுறை அபூர்வமாகத் திறக்கும் கதவுகள் வேண்டப்பட்ட ஒரு சிலரைமட்டுமே உள்ளே அனுமதித்துக்கொண்டு மீண்டும் மூடிக்கொள்கின்றன.