இனம், மொழி,
நிலம் ஆகிய தெளிவான அடையாளங்களுடன் எழுதப்படும் வரலாற்றை ஒரு பெரிய தொகைநூலாக எடுத்துக்கொண்டால், அந்த நூலில் மேற்சொன்ன அடையாளங்களை அழுத்தம்திருத்தமாக நிறுவும் அம்சங்களுக்கே முதன்மையான இடம் வழங்கப்பட்டிருக்கும். அதற்கான மனிதர்களையே அந்தத் தொகைநூல் மாமனிதர்களாக முன்வைக்கும் வாய்ப்பே அதிகம். அதுவே இயற்கை. ஆனால் ஆனால் அந்த அடையாளங்களைக் கடந்து ஒரு குறிக்கோளுக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்கள் எல்லா வட்டாரங்களிலும் வாழ்ந்திருப்பார்கள். ஒற்றை நோக்கத்துடன் உருவாக்கப்படும் பெருந்தொகைநூல்களில் பற்பல சமயங்களில் அத்தகு மாமனிதர்களைப்பற்றிய பதிவுகளுக்கு இடமின்றிப் போகலாம். அவர்களைப்பற்றிய நினைவுகளைப் பாதுகாக்கவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரிவிக்கவும் தனித்த வட்டார வரலாற்றை முன்வைக்கும் தொகைநூல்களை உருவாக்கவேண்டியிருக்கிறது. இவ்விரண்டு தொகைநூல்களிலும் சேராமல் விடுபட்ட கிராம வரலாறுகள் வேறொரு தொகைநூல்களாக உருவாக்கப்படவேண்டும். இவ்விதமாக மூன்று தளங்களிலான வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி அறிந்துகொள்வதே ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளும் சிறந்த வழி.