காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்டி இருக்கும் தூணுக்கு மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் தண்டவாளத்துண்டில் கம்பங்கதிர் மாதிரி நீண்டிருக்கும் இன்னொரு இரும்புக்குச்சியால் அடித்து எழுப்பப்படும் நீண்ட டண்டண்டண் மணியோசை எழுந்து வரும். அதைப்போன்ற இனிமை மிகுந்த ஓசை இந்த உலகத்திலேயே இல்லை என்ற எண்ணம் தோன்றாத நாளே இல்லை.