Home

Friday 30 March 2018

தாய்மையும் உலகமும் - பெரியசாமியின் ’மதுவாகினி’




பெரியசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுதி மதுவாகினி. சிக்கலற்ற இயல்பான சொற்செட்டுகளோடும் வசீகரமான கற்பனையோடும் இருக்கின்றன அவருடைய கவிதைகள். புறக்காட்சிகளில் இயல்பாகவே ஈடுட்பாட்டுன் படியும் மனம்கொண்டவராக உள்ளார் பெரியசாமி. இந்த ஒன்றுதலால் உள்ளோங்கியெழும் அனுபவங்கள் பெரியசாமியிடமிருந்து அழகான கவிதைகளாக வெளிப்படுகின்றன.

ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை - எம்.சுகுமாரனின் ’சிவப்புச்சின்னங்கள்’



எம்.சுகுமாரன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய மலையாள எழுத்தாளர்களில் முக்கியமான ஓர் ஆளுமை. தொழிற்சங்கங்களில் நேரடி ஈடுபாடு கொண்டவர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் அவர் காட்டிய தீவிரத்தின் விளைவாக அரசுப்பணியை இழந்தவர். 1982 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து எழுதிய பிறகு பத்தாண்டு காலம் எழுத்து முயற்சிகளைவிட்டு விலகியே இருந்தார். பிறகுபித்ருதர்ப்பணம்என்னும் சிறுகதையின் வழியாக அவரது இரண்டாவது கட்ட எழுத்துவாழ்க்கை தொடங்கியது. ’சிவப்புச்சின்னங்கள்என்னும் குறுநாவல் தொகுப்புக்காக அவர் சாகித்திய அகாதெமியின் விருதைப் பெற்றார். தட்டகம், ஆலாஹாவின் பெண்மக்கள், யாழ்ப்பாணப்புகையிலை, அய்யன் காளியின் வாழ்க்கைவரலாறு  போன்ற படைப்புகளை ஏற்கனவே மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நிர்மால்யா எம்.சுகுமாரனின் சிவப்புச்சின்னங்கள் குறுநாவல் தொகுப்பையும் தமிழாக்கம் செய்துள்ளார்.

Sunday 25 March 2018

கோபால் மேஷ்ட்ரு - கட்டுரை



      "மேஷ்ட்ரு" என்னும் கன்னடச் சொல்லுக்கு ஆசிரியர் என்பது பொருள். கோபால் மேஷ்ட்ரு எனக்கு அறிமுகமாகும்போதே வேலையில் சேர்ந்திருந்தார். ஹோஸ்பெட் என்னும் ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு சிற்று¡ரில் அவர் பணிபுரியும் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கே அவர் கன்னட ஆசிரியர். அவர் தாய்மொழி மலையாளம். துங்கபத்ரா இரும்பு எஃகு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக மலப்புரத்திலிருந்து இடம்பெயர்ந்தவர் அவர் தந்தை.  அப்போது சிறுவனாக இருந்த கோபால் கன்னடப்பள்ளியில் சேர்ந்து படித்துப் பட்டம் வாங்கி கன்னட ஆசிரியராகவே வேலைபார்க்கத் தொடங்கிவிட்டார். அவரது சகோதரர் விஜயன். அதே தொழிற்சாலையில் ஊழியராக இருந்தார். அவர்களுடைய வீட்டின் ஒரு பகுதியில்தான் நானும் என் மனைவியும் முதன்முதலாக வாடகைக்குக் குடிபுகுந்தோம்.

இரண்டு தலைக்கவசங்கள் - கட்டுரை




     இலட்சுமிபுரத்தையும் இந்திரா நகரையும் ஒரு பூங்காதான் இணைக்கிறது அல்லது பிரிக்கிறது என்று சொல்லவேண்டும். புல்தரை இல்லாத ரொம்பவும் வறட்சியான பூங்கா. சுற்றுச்சுவரையொட்டி ஆறேழு மரங்கள். சுற்றுப் பாதையையொட்டி பத்து சிமெண்ட் பெஞ்சுகள். அவற்றில் மூன்று பெஞ்சுகளுக்கு முதுகு கிடையாது. சிலுவைபோல வெறும் கம்பிகள்மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கும். இரண்டு பெஞ்சுகள் பொக்கையும் பொறையுமாக இருக்கும். அவற்றில் உட்கார்வது எளிது. எழுந்திருக்கும்போது கவனமாக இல்லையென்றால் எங்கேயாவது சிக்கிக்கொள்ளும் புடவையோ வேட்டியோ கிழிந்துபோவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

Friday 9 March 2018

திரைப்படம் உருவாகும் கதை




என் மனம் கவர்ந்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாறு இன்றியமையாத ஓர் ஆவணம்.  இளம்பருவத்தில் அம்மா செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே செல்கிற சார்லி, ராணுவ வீரர்கள் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிப் பாடலுக்குப் பிறகு தொடரமுடியாமல் குரல் இடற தடுமாறிய தருணத்தில், சட்டென்று மேடைக்கு வந்து மீதிப் பாடலைப் பாடுகிறான். அதற்குப் பிறகு சார்லி மேடையை விட்டு இறங்கவே இல்லை.  பாடல், ஆடல், நாடக நடிகன் என மாறிமாறி மேடையிலேயே சார்லியின் வாழ்க்கை தொடர்கிறது. பேசாப்படங்களின் மாபெரும் கலைஞனாக வளர்ச்சியடைந்த சார்லி, நடிப்பைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் திரைப்படங்களை இயக்கும் இயக்குநராகவும் பணியாற்றி வெற்றியடைகிறார்

கண்காணிப்புக் கோபுரம் - சிறுகதை




கண்காணிப்புக் கோபுரம் இருந்த குன்றின் உச்சியை நோக்கிச் செல்லும் பாதையின் நாலாவது திருப்பத்தில் நொச்சிமரத்தடியில் வழிமாறிச் சென்றுவிட்ட எருமையொன்று குழப்பத்தில் நான்கு திசைகளிலும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைத் திருப்பி கண்ணாடிக்கோளம்போல மின்னும் கரிய விழிகளை உருட்டிம்மேஎன்று முதலில் சத்தமிட்டது. பிறகு, அதை நெருங்காமலேயே விலகி நின்றுவிட்ட என் திகைப்பை உணர்ந்து நான் அதனுடைய மேய்ப்பனல்ல என்பதைப் புரிந்துகொண்டு, மற்ற திசைகளின் பக்கம் தலையைத் திருப்பி பலவீனமான குரலில் மீண்டும்மீண்டும்ம்மே ம்மேஎன்றது. அதன் கழுத்து வேகமாக அசையும்தோறும் மணியசைந்து ஓசை எழுந்தது.