உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட
அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை
ஒரே கட்டாக வண்ணக்காகிதத்தில் சுற்றிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் எங்கள்
அம்மா அந்தக் கட்டைப் பிரித்தார். “எல்லாமே ஒரே எழுத்தாளர் எழுதிய புத்தகமா இருக்குதுடா”
என்றார். நான் அவற்றை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே மு.வரதராசனார் எழுதியவை. அன்னைக்கு,
தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு ஆகியவை. அந்த வாரத்திலேயே அவை அனைத்தையும் படித்துமுடித்தேன்.
கடித வடிவத்தில் கூட ஒரு புத்தகத்தை எழுதமுடியும் என்னும் அம்சம் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும்
இருந்தது. அறிவுரைகள், வாழ்க்கைச்சம்பவங்கள், சின்னச்சின்ன கதைகள், எடுத்துக்காட்டுகள்
என ஏராளமான விஷயங்களின் கலவையாகவும் தொகுப்பாகவும் இருந்தது. ஒரு பயணம் போய்வந்த அனுபவத்தைக்கூட
அவர் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். ஏதோ ஒரு கடிதத்தில் அன்று படித்து மனத்தில் பதியவைத்துக்கொண்ட
ஒரு கருத்து, (சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாத நிலையில் புறக்கணிக்கக்
கற்றுக்கொள்) இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணியென பதிந்திருக்கிறது.