Home

Saturday 18 November 2017

வெங்கட் சாமிநாதன் - சில பொழுதுகள் சில நினைவுகள்






கலாப்ரியாவின் பழைய கவிதையொன்றில் படித்த ’மைக்கறை பற்றிக் கவலைப்படாத பேனா ரிப்பேர்க்காரன்’ என்னும் வரி நினைவில் படர்கிறது.    நமது இலக்கியம், பண்பாடு, கலைகள், மொழி ஆகியவை அனைத்தும் மேன்மையுறும் கனவுகளோடும் அக்கறையோடும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக தன் கருத்துகளை முன்வைத்து வாதாடி வந்த வெங்கட் சாமிநாதனோடு இணைத்துப் பார்க்க முற்றிலும் பொருத்தமான வரியாகவே அதை நினைக்கிறேன். அவர் எதிர்பார்த்ததுபோலவே தமிழ்ச்சூழல் அவரைப் புறக்கணித்தது. கடுமையாக வசைபாடியது. அதனால் அவர் வேதனை அடைந்ததுண்டு. ஆயினும் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் தான் நினைத்த உயர்ந்த மதிப்பீடுகளைப்பற்றி இறுதி மூச்சுவரைக்கும் இடைவிடாமல் பேசியும் எழுதியும் வந்தார். அவர் கைகள் மைக்கறையால் அழுக்கடையாத நாளே இல்லை. ஆனால் அவர் அதை ஒரு பிரச்சினையாகக் கருதியதே இல்லை.  பழுது நீக்குபவனின் தீவிரத்தோடும் அக்கறையோடும் இடைவிடாமல் அவர் செயல்பட்டபடியே இருந்தார்.

Tuesday 14 November 2017

கலவரத்தின் பன்முகங்கள்


1998 ஆம் ஆண்டில் கோவை நகரில் மதக்கலவரம் நிகழ்ந்தது. 19 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அக்கம்பக்கத்தில் இருந்த பல இஸ்லாமியக் குடியிருப்புகள் சிதைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. பல வீடுகள் எரிக்கப்பட்டன. சிறுகச்சிறுக சேர்த்த செல்வத்தை ஒரு சில மணி நேரங்களில் இழந்து மனிதர்கள் தெருவில் நிற்கும் நிலை உருவானது. அனைத்தும் ஆறா வடுக்களாக மாறி பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் கலவரத்தை களமாகக் கொண்ட பல்வேறு சிறுகதைகளைத் தொகுப்பாக்கியிருக்கிறார் அ.கரீம் என்னும் இளம் எழுத்தாளர்.

வன்மத்தின் கலை



சராசரி மனிதர்களின் எளிய வாழ்க்கையே நவீன இலக்கியத்தின் மையமாக விளங்குகிறது என்பது ஒரு பொதுவான இலக்கணம்.  தொடக்ககாலப் படைப்புகளில் ஏராளமான அன்றாடக்காட்சிகளின் தொகுப்பு தோராயமாக முன்வைக்கப்பட்டன.  மெல்ல மெல்ல அதே அன்றாடக்காட்சிகள் துல்லியத்தை நோக்கி நகர்ந்தன. மாபெரும் தருணங்கள் கதைவெளிக்குள் நிகழ்ந்தன. ஒரு காலகட்டத்தில் எளிய மனிதர்களுக்குள் ஒளிந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் சிறகு விரித்து விண்வெளியில் நீந்திச்செல்லும் பறவைகளும் சித்தரிக்கப்பட்டன. இன்னொரு காலகட்டத்தில் யானைகளின் பிளிறலும் அஞ்சி வளைகளுக்குள் ஓடோடி ஒளிந்துகொள்ளும் எலிகளின் நடுக்கமும் காட்சிப்படுத்தப்பட்டன. கையறுநிலையில் துன்பம் கொண்டு தவிப்பதையும் சின்னஞ்சிறு புன்னகையையே ஒரு துடுப்பாகக் கொண்டு அதே துன்பத்தைக் கடந்துபோகும் அற்புதத்தையும் மற்றொருகாலகட்டம் பதிவுசெய்தது.