வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘எனது பர்மா வழிநடைப்பயணம்’ புத்தகத்தைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. இன்று, இரண்டாம் உலகப்போர் என்பது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுத்தகவல். ஆனால் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கோ உயிர்ப்பிரச்சினை. ஜப்பானிய போர்விமானங்கள் ரங்கூன் நகரத்தின் மீது குண்டுவீசித் தாக்கியபோது, அங்கே வாழ்ந்துவந்த ஏராளமான தமிழர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நகரத்தைவிட்டு உடனடியாக வெளியேறி பதுங்கு குழிகளில் வாசம் செய்தனர். பிறகு அகதிகளாக அங்கிருந்து தப்பினார்கள். ஆங்கில ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் விமானம் வழியாகவும் கப்பல் வழியாகவும் வெளியேற, எந்தத் தொடர்புமற்றவர்கள் நடந்தே வெளியேறினார்கள். கடுமையான குளிரில் காட்டுப்பகுதி வழியாக இரண்டு மாதம் பயணம் செய்து கல்கத்தாவுக்குள் நுழைந்தனர். அகதியோடு அகதியாக பர்மாவிலிருந்து வெளியேறியவர்களில்
வெ.சாமிநாதசர்மாவின் குடும்பமும் ஒன்று. தம் சொந்த வாழ்வனுபவத்தையே அவர் நூலாக எழுதியுள்ளார்.