வழக்கமாக கோடை விடுமுறை தொடங்கியதும் என் தம்பிகளின் குழந்தைகள் பெங்களூருக்கு வந்து சிறிது காலம் தங்கிவிட்டுச் செல்வார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வதும் பூங்காக்களுக்குச் செல்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூங்காவுக்குச் செல்வோம். ஒரு பள்ளித்தோழனிடம் பகிர்ந்துகொள்வது போல தம் வகுப்புகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் விளையாட்டுகளையும் பற்றியெல்லாம் என்னுடன் அப்பிள்ளைகள் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பல சமயங்களில் நான் அவர்களுக்கு புதிதுபுதிதாக பாடல்களை எழுதிப் பாடிக் காட்டுவேன். அவர்களும் அவற்றை ஆசையோடு பயிற்சியெடுத்து படித்து பாடிக் காட்டுவார்கள்.