Home

Sunday 29 November 2020

கனவுகள் பொசுங்கிய உலகம் - கட்டுரை

 

ஆலாஹா என்பது ஒரு குறியீட்டுச்சொல். துரதிருஷ்டம், இயலாமை, பேய், பிசாசு என பீதியும் துக்கமும் தரக்கூடிய எல்லா அம்சங்களையும் பொதுவாகக் குறிக்கும் சொல். ஆலாஹாவின் பெண்மக்கள் என்பதற்கு துரதிருஷ்டவசமாக வேதனைக்கு ஆளாகிற பெண்கள் என்பதுதான் பொருள். ஒரு குடும்பத்தில் துரதிருஷ்டவசமாக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சரிந்துவிழுகிற பெண்களின் வரலாற்றைத் தொகுத்து முன்வைத்துள்ள பதிவாக விரிவடைகிற இந்தப் படைப்புக்கு இத்தலைப்பு பொருத்தமாகவே உள்ளது. நாவலின் ஊடுபாவாக ஒரு புறநகர்ச்சேரியின் உருவாக்கமும் அதில் நிகழ்கிற குடியேற்றமும் கால ஓட்டத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நுட்பமானவகையில் முன்வைக்கப்படுகின்றன. ஆன்னி என்றொரு சிறுமியின் பார்வை வழியாக நாவல் நகர்ந்துசெல்கிறது. தொடக்க அத்தியாயத்தில் அவள் சின்னஞ்சிறுமி. இறுதி அத்தியாயத்தில் அவள் ஓரளவு வளர்ந்தவள்.

மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: வைக்கம் முகம்மது பஷீர் - காலம் முழுதும் கலை - கட்டுரை

  

மலையாள இலக்கிய உலகத்தில் மாபெரும் படைப்பாளியாக கருதப்படுகிற வைக்கம் முகம்மது பஷீரின் தோற்றம் முதல் மறைவுவரைக்குமான வாழ்க்கை வரலாறு பத்தொன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காலம் முழுதும் கலை என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இருபதாவது பகுதியாக, என் மரணக்குறிப்பு என்கிற தலைப்பில் பஷீர் இறுதியாக எழுதிய கட்டுரைக்குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இதை எழுதியவர் இ.எம்.அஷ்ரப். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குறிஞ்சிவேலன்.

Wednesday 25 November 2020

காற்றினிலே வரும் கீதம் - கட்டுரை


இரவு மணி பதினொன்று. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி மேசைமீது வைத்துவிட்டு எழுந்தேன். படுக்கச் செல்வதற்கு முன்னால் வாசல் கதவில் தொடங்கி பின்கட்டுக் கதவு வரைக்கும் ஒவ்வொன்றையும் சரியாக சாத்தியிருக்கிறார்களா, தண்ணீர்க்குழாய்களை மூடியிருக்கிறார்களா என ஒருமுறை பார்த்துவிட்டு வருவது என் பழக்கம். நேற்றும் அப்படித்தான் பார்த்துக்கொண்டே சென்றேன். சமையல்கட்டு ஜன்னல் கதவுகள் இரண்டும் திறந்திருந்தன. அருகில் சென்று மூடுவதற்காக கைநீட்டி ஜன்னல் கதவை இழுத்தபோது வானத்தில் நிலா தெரிந்தது.

பூக்காத மரம் - சிறுகதை

 

ஜஸ்ட் டொன்டி ஃபைவ் ருப்பீஸ்தான் சார். ஒரே ஒரு க்ரூப் போட்டா எடுத்துக்குங்க சார். லால்பாக நீங்க ஒரு சுத்து சுத்திட்டு வரதுக்குள்ள நான் ப்ரிண்ட் போட்டு குடுத்துருவன் சார். போஸ்ட் கார்ட் சைஸ் கலர் ப்ரின்ட்என்றேன். இன்று தென்பட்ட முதல் வாடிக்கை. பத்து பன்னிரண்டு பேர் கொண்ட அந்தக் கூட்டத்தை விட்டுவிடக்கூடாது என்று தோன்றியது. “இங்க பாருங்க சார். இது பூக்காத மரம். எந்தப் பருவத்துலயும் இது பூத்ததே இல்ல. ரொம்ப அபூர்வமான மரம் சார். இங்க வரவங்க எல்லாருமே இதுக்கு பக்கத்துல நின்னு படம் எடுத்துக்குவாங்க சார். வாங்க சார் வாங்க”. அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பி ஆர்வமூட்டுவதற்காகச் சொன்னேன்.

Sunday 15 November 2020

முறியாத இலட்சியமும் முறிந்த காலும் - கட்டுரை

 

கடந்த நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக நாடெங்கும் மிகப்பெரிய எழுச்சி உருவாகி வந்த சூழலில், தமிழகத்தில் ஆலயப்பிரவேசம் நடைபெற்ற முதல் நகரம் மதுரை. மதுரையை முன்மாதிரியாகக் கொண்டு பிற நகரங்களிலும் கிராமங்களிலும் அடுத்தடுத்து ஆலயப்பிரவேசம் நிகழ்ந்தது. அதன் வழியாக, சாதி சார்ந்த வேறுபாடுகளின்றி எல்லா ஆலயங்களிலும் அனைவரும் நுழைந்து தெய்வத்தை வணங்கி வழிபடும் உரிமை உறுதி செய்யப்பட்டது. பிறகு அது சட்டமாகவும் இயற்றப்பட்டது. ஆலயபிரவேசம் என்பது தமிழ்ப்பண்பாட்டுத் துறையில் நிகழ்ந்த பெரிய மாற்றத்தின் தொடக்கம்.

க.அருணாசலம் : அமரத்துவமும் மதுரமும்

 


கதராடைகள் மீதான ஈடுபாட்டை வளர்த்தல், தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்துதல், நிதி திரட்டுதல் ஆகிய நோக்கங்களுடன் இருபதுகளின் இறுதியில் காந்தியடிகள் திருநெல்வேலிக்கு வந்திருந்தார். அன்று மாலை பொதுமக்களிடையே அவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவருக்கு அருகிலிருந்த மேசைமீது கட்டுகட்டாக கதர்த்துணிகள் இருந்தன. கதர் நிதிக்காக கொடுக்கப்பட்ட துணிக்கட்டுகள் அவை. நிகழ்ச்சியின் இறுதியில் ஏலத்துக்கு விடப்பட்டு கிடைக்கும் பணத்தை நிதிக்கணக்கில் சேர்த்துக்கொள்வதற்காக அவை வைக்கப்பட்டிருந்தன.

Monday 9 November 2020

கெய்த்தான் : சோர்வும் துயரமும் தொண்டருக்கில்லை

 


1920ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் வெகுவேகமாகப் பரவி தீவிரமடைந்தது. அகிம்சைவழியில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் பெண்களும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கில் பங்கேற்று சிறைபுகுந்தனர். அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணித்தல், அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் மறியல் செய்தல், கள்ளுண்ணாமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல், கள்ளுக்கடைகளின் முன்னால் மறியல் செய்தல், கதராடைகளை அணியும்படி பிரச்சாரம் செய்தல், நூல்நூற்றல் போன்ற செயல்களையும் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் படிப்படியாக இணைத்துக்கொண்டார். கதராடைகளைப் பயன்படுத்துவது பெருகப்பெருக, மிகக்குறைந்த  வருமானமுடைய ஏழைகள்கூட நிறைவான வாழ்க்கையை வாழமுடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். 

டால்ஸ்டாயின் மற்றொரு முகம் - கட்டுரை

 


நான் எழுத நினைத்த காந்திய ஆளுமைகளின் வரிசையில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஒருவர். அவரைப்பற்றிய தகவல்களுக்காக ஓராண்டாகத் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல நான் சந்திக்கும் அனைவரிடமும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லிவைத்தேன். ஒருநாள் என் சென்னை நண்பரொருவர் ஆக்கூரார் எழுதிய சுயசரிதையை தன் இளம்வயதில் படித்திருப்பதாகவும் அந்தப் புத்தகம் சமீபத்திய வெள்ளத்தில் நனைந்து கிழிந்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால் புத்தகத்தின் பெயரோ, அதில் படித்த தகவல்களோ எதுவுமே அவருக்கு நினைவிலில்லை.

Monday 2 November 2020

மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)

 


பாரதி புதையல் திரட்டுகளையும் சித்திரபாரதியையும் வழங்கிய பாரதி அறிஞரான ரா.அ.பத்மநாபன் அவர்களின் முயற்சியால் பாரதியாரின் இருபத்துமூன்று கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவிக்கு எழுதிய ஒரேஒரு கடிதத்தைத் தவிர மற்றவை அனைத்தும் பிறருக்கு எழுதியவை. பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் அவருடைய படைப்பாளி என்கிற முகத்தை அறிய உதவுகின்றன. அவருடைய கடிதங்கள் பாரதியார் என்கிற மனிதரைப்பற்றி அறிய உதவுகின்றன. எல்லா மனிதர்களுக்கும் இருப்பதுபோலவே அவருள்ளும் ஏராளமான கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்திருக்கின்றன. எதிர்பார்த்தது கிட்டாத தருணங்களில் மற்றவர்கள் இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய சலிப்பும் கசப்பும் தோல்வியுணர்வும் கிஞ்சித்தும் அவரிடம் இல்லை. வாழ்வின் எக்கணத்திலும் கனிவையும் கனவையும் கைவிடாத அபூர்வ மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். சங்கடங்களும் தோல்விகளும் நிறைந்ததாகவே சொந்த வாழ்க்கை அமைந்துபோனாலும் அவற்றால் ஆக்கிரமிக்கப்படமுடியாத ஓர் ஆளுமையாக உயர்ந்து காணப்படுகிறார். 39 வயதுமட்டுமே வாழ்ந்த ஒருவரிடம் வெளிப்பட்டுள்ள இப்பண்புகள் மிகமுக்கியமானவை. கனிவு என்பதை வாழ்வின் சாரமாக புரிந்துகொண்டு வெளிப்படுத்திய அவரை மிக நெருக்கமாக உணரமுடிகிறது. இக்கடிதங்களின் தொகுப்புநூல் அதற்குத் துணையாக இருக்கிறது.