ஆலாஹா என்பது ஒரு குறியீட்டுச்சொல். துரதிருஷ்டம், இயலாமை, பேய், பிசாசு என பீதியும் துக்கமும் தரக்கூடிய எல்லா அம்சங்களையும் பொதுவாகக் குறிக்கும் சொல். ஆலாஹாவின் பெண்மக்கள் என்பதற்கு துரதிருஷ்டவசமாக வேதனைக்கு ஆளாகிற பெண்கள் என்பதுதான் பொருள். ஒரு குடும்பத்தில் துரதிருஷ்டவசமாக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சரிந்துவிழுகிற பெண்களின் வரலாற்றைத் தொகுத்து முன்வைத்துள்ள பதிவாக விரிவடைகிற இந்தப் படைப்புக்கு இத்தலைப்பு பொருத்தமாகவே உள்ளது. நாவலின் ஊடுபாவாக ஒரு புறநகர்ச்சேரியின் உருவாக்கமும் அதில் நிகழ்கிற குடியேற்றமும் கால ஓட்டத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நுட்பமானவகையில் முன்வைக்கப்படுகின்றன. ஆன்னி என்றொரு சிறுமியின் பார்வை வழியாக நாவல் நகர்ந்துசெல்கிறது. தொடக்க அத்தியாயத்தில் அவள் சின்னஞ்சிறுமி. இறுதி அத்தியாயத்தில் அவள் ஓரளவு வளர்ந்தவள்.