Home

Tuesday 29 December 2020

தியாகம் போற்று - கட்டுரை

  

சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் பாடுபட்ட காந்தியடிகள்  இந்தியர்கள் அனைவரும் நேர்மையோடும் தன்மானத்தோடும் வன்முறையற்ற நல்லிணக்கத்தோடும்  தம் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டார். அபூர்வமான அந்த மகத்தான ஆளுமையால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் நாடெங்கும் தேச சேவையிலும் அவருடைய நிர்மாணப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள். அதற்காக தம் வாழ்க்கையையே  அர்ப்பணித்தார்கள்.  

மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை - கட்டுரை

 

தனித்துத் திரியும் காலத்தின் வெவ்வேறு கோலங்களை கவிதைச் சித்திரங்களாக இத்தொகுதியில் வடித்திருக்கிறார் மலர்ச்செல்வன். தனித்துத்திரிதல் என்னும் சொல்லே கவித்துவம் நிறைந்ததாக உள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிற சூழலில் உலகத்திலிருந்து விலகி தனித்துத் திரியும் விருப்பம் ஒருவனுடைய மனத்தில் எப்படி முளைவிடுகிறது என்பது முக்கியமான கேள்வி. சுற்றியிருக்கிற உலகத்திலிருந்து அவனால் வாழும் விருப்பத்தையோ அன்பையோ பெறமுடியாமல் போனது ஏன் என்பதும் முக்கியமான கேள்வி. மறுகணம் உயிர்த்திருப்போமா என்பதே உறுதியாகத் தெரியாத இன்றைய இலங்கைச்சூழல் நம்பிக்கைக்குப் பதிலாக பீதியையும், வேகத்துக்குப் பதிலாக விரக்தியையும் மனத்தில் கவியவைத்துவிட்டன. ஒரே ஒரு மணிநேரம் கூட நிம்மதியாக உறங்கமுடியாததாக மாறிவிடுகிறது இரவு. பீதியிலிருந்தும் விரக்தியிலிருந்தும் தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொள்ள தங்குமிடத்திலிருந்து கிளம்பித் திரிய வேண்டியிருக்கிறது. திரியும் தருணத்தில் குலைந்துபோய் கண்ணில் படும் காட்சிகள் பழைய நினைவுகளைக் கிளறிவிடுகின்றன. மரணக்காட்சிகளும் மரணச்செய்திகளும் நிலைகுலையவைக்கின்றன. தனித்துத் திரிவது தாங்கமுடியாத பதற்றத்தைத் தரத்தொடங்கியதும் அறையை நாடி ஓடிவருகிறது மனம். அறையின் தனிமை அதைவிட கூடுதலான பதற்றத்தைத் தரும்போது வெட்டவெளியையே தன் உலகாகக் கொண்டு தனித்தலைய மீண்டும் ஓடுகிறது. நிலைகொள்ளமுடியாத இக்கொடுமையை தொடர்ச்சியாக சந்தித்துவரும் மனம் தீட்டிய சித்திரங்களே இக்கவிதைகள். மரணம் மையமாக உள்ள ஒரு பொதுஉண்மை. அதை வாழ்வின் வட்டப்பாதையின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் தம் கோணத்தில் தரிசிக்கின்றன மலர்ச்செல்வனின் கவிதைகள்.

Monday 21 December 2020

மாபெரும் தரிசனம் - ‘பேரருவி’ நாவலுக்கான முன்னுரை


கலாப்ரியா நம் காலத்து முதல்வரிசைக் கவிஞர்களில் ஒருவர். கவிஞருக்கே உரிய கவனிக்கும் கண்களைக் கொண்டவர். வேடந்தாங்கல் சரணாலயத்தில் நிறைந்திருக்கும் பறவைகள்போல அவருடைய கவியுலகில் துண்டுதுண்டான எண்ணற்ற காட்சிகள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொருவிதமான எண்ணங்களை எழுப்பும் ஆற்றல் கொண்டது.

பல்லக்குத்தூக்கி - சிறுகதை

 

அம்பலவாணன் வாழ்க்கையில எனக்குக் கெடச்ச பெஸ்ட் ஃப்ரண்ட் சார். எனக்கு அட்வைஸர், மென்ட்டர் எல்லாமே அவன்தான். இப்படி அல்பாயுசுல போய்டுவான்னு ஒருநாளும் நெனச்சிகூட பார்த்ததில்லஎன்று நான் சொன்னேன். பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த எக்சைஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலையை மட்டும் அசைத்துக்கொண்டார். ஒரேஒரு கணம் மட்டுமே என்மீது அவருடைய பார்வை படிந்து விலகியது. எதிலும் நிலைகொள்ளாத தன்மையுடன் அருகிலிருந்த தென்னைமரங்களையும் அவற்றைச் சுற்றிச்சுற்றி விளையாடும் அணில்களையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

Sunday 13 December 2020

கனவு மலர்ந்தது - புதிய சிறுகதைத்தொகுதி

  

கவிதை என்ற தலைப்போடு தமிழில் வெளிவந்த நூற்றுக்கணக்கான கவிதைகளைப் படித்திருக்கிறேன். பெரும்பாலான வரிகள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டும்  கல்மேல் பொறிக்கப்பட்ட எழுத்தாக படித்ததுமே நெஞ்சில் ஆழமாக வேரூன்றி இன்றுவரை நிலைத்திருக்கிறது. அது தேவதேவன் எழுதிய கவிதை.  கவிதை என்னும் தலைப்பில் பட்டுப்போய் நிற்கும் ஒரு மரத்தில் எங்கிருந்தோ வந்து அமர்ந்திருக்கும் ஒரு குருவியைப்பற்றிய சித்திரத்தை அவர் முன்வைத்திருந்தார். படித்ததுமே என் மனமும் கண்களும் நிறைந்துவிட்டன. எவ்விதமான நோக்கமோ காரணமோ இல்லாமல் மரக்கிளையில் வந்து அமரும் குருவியைப்போல கவிதைக்குரிய கணம் நிகழ்கிறது. அது தவத்தின் தருணமா அல்லது கருணையின் தருணமா என்பது ஒருபோதும் பிரித்தறிய முடியாத ரகசியம்.

தரிசனம் - சிறுகதை

 

இந்த ரெண்டு மாசமா நீ செஞ்ச சர்வீச விட இனிமே நீ செய்யப் போற சர்வீஸ்தான் ரொம்ப முக்கியமானது சிவகாமி. நல்லபடியா பாத்துக்கணும், என்ன?” என்றார் டாக்டர். “டியூபெல்லாம் எடுத்துட்டதால இனிமேல் சாப்பாடு, மருந்து எல்லாத்தயும் நேரிடையாவே மேடத்துக்கு கொடுக்கலாம்

டாக்டர் புறப்படும் நேரத்தில் மேடம் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்தார். அடிக்கடி படபடத்த அவர் கண்களில் சோர்வும் திகைப்பும் கலந்திருந்தன. இரண்டு மாதங்களாக சுயநினைவில்லாமல் படுத்திருந்தவருக்கு நேற்றுதான் விழிப்பு வந்தது. “நான் கெளம்பறேன் மேடம். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து பாக்கறேன். இடையில தேவைப்பட்டா எனக்கு ஒரு ஃபோன் பண்ண சொல்லுங்க. அர மணி நேரத்துல வந்துருவன்என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

Monday 7 December 2020

ஆனந்த நிலையம் - ரவிசுப்பிரமணியனின் முன்னுரை

 

நாம் இப்போ என்ன செய்யலாம்?

ரவிசுப்பிரமணியன்


ரெண்டு மாமாங்கமாய் நண்பர் பாவண்ணனை நான் நேரிலும் அறிவேன். அவர் அதே இலக்கிய இளமை மாறாது இன்றும் இருக்கிறார் என்பதற்கு இந்த சிறுகதைத் தொகுப்பும் கட்டியம் கூறி வந்து நிற்கிறது.

 

பாவண்ணன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். அவர் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பது அவரோடு நெருங்கி பழகிய வெகு சிலருக்கே தெரியும். தன் கதைகளையே பல எழுத்தாளர்களுக்கு விவரணையாக சொல்லத் தெரியாது. ஆனால் பாவண்ணன் பல எழுத்தாளர்களின் கதைகளை அவ்வளவு ஞாபகமாகவும் எழுதியவரே யோசித்திராத பல உப பிரதிகளோடும் சுவாரஸ்யமாகவும் காட்சிப் பூர்வமாகவும் சொல்லி நம் கண்முன் நிறுத்திவிடுவார்.

ஆனந்த நிலையம் - புதிய சிறுகதைத்தொகுதி முன்னுரை

  

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வண்ணதாசன் எழுதியிருந்த ஒரு கவிதைத்தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு கவிதையில் நின்றுகொண்டிருப்பதைவிட சென்றுகொண்டிருப்பது மேல் என்னும் வரியைப் படித்ததும், அது எனக்காகவே எழுதப்பட்ட ஒரு வரியைப்போலவே தோன்றியது.

ஒன்றைச் செய்யமுடியவில்லையே என தேங்கியும் திகைத்தும் நிற்பதைவிட, செய்யமுடிந்த வேறொன்றைத் தொடங்கி செய்துகொண்டே இருப்பது நல்லது என அக்கவிதை வரியை எனக்குரியதாக மாற்றிக்கொண்டேன். தொடரும் செயல்கள் வழியாக நமக்குள் திரளும் ஆற்றலால் என்றோ நிறுத்திய செயலையும் செய்துமுடிக்கும் வேகமும் கைகூடும் என்னும் நம்பிக்கையையும் அந்த வரி விதைப்பதாக நினைத்துக்கொண்டேன். அன்றுமுதல் என் வாழ்வில் அவ்வரியை நினைத்துக்கொள்ளாத நாளே இல்லை.

ஓமந்தூரார் : எளிமையும் துறவும் - கட்டுரை

 


1919இல் இந்தியாவின் தலைமைச்செயலராக இருந்த மாண்டேகுவும் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டுவும் இணைந்து இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்கும் வகையில் தயாரித்து அனுப்பிய அறிக்கைக்கு இங்கிலாந்து அரசு உடனடியாக ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி சென்னை, வங்காளம், பம்பாய், மத்திய மாகாணங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டன. அதற்கான தேர்தலும் உடனடியாக அறிவிக்கப்பட்டது.