”அம்பலவாணன் வாழ்க்கையில எனக்குக் கெடச்ச பெஸ்ட் ஃப்ரண்ட் சார். எனக்கு அட்வைஸர், மென்ட்டர் எல்லாமே அவன்தான். இப்படி அல்பாயுசுல போய்டுவான்னு ஒருநாளும் நெனச்சிகூட பார்த்ததில்ல” என்று நான் சொன்னேன். பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த எக்சைஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலையை மட்டும் அசைத்துக்கொண்டார். ஒரேஒரு கணம் மட்டுமே என்மீது அவருடைய பார்வை படிந்து விலகியது. எதிலும் நிலைகொள்ளாத தன்மையுடன் அருகிலிருந்த தென்னைமரங்களையும் அவற்றைச் சுற்றிச்சுற்றி விளையாடும் அணில்களையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.