Home

Monday 24 July 2017

இயற்கை என்னும் பேராசான்- க.நா.சு.வின் "கஞ்சிங் ஜங்கா"


தொடக்கப்பள்ளியில் நான் படித்த காலத்தில் எங்கள் பள்ளி ஆசிரியை ஒவ்வொரு நாளும் ஒரு கதையைச் சொல்வார். கதைநேரம் என்கிற பெயரில் ஒரு பாடப்பிரிவு அப்போது இருந்தது. எல்லாக் கதைகளையும் எங்கள் ஆசிரியை எப்போதும் ஒரு நீதிவாக்கியத்தில் கொண்டுவந்துதான் முடிப்பார். குறைவான நீருள்ள குடத்துக்குள் சின்னச்சின்ன கூழாங்கற்களைக் கொண்டுவந்து போட்டுவிட்டு நீர்மட்டம் உயர்ந்துவந்ததும் தண்ணீர் அருந்தி தன் வேட்கையைத் தணித்துக்கொண்ட காக்கையின் கதையை விரிவாகச் சொல்லிமுடிக்கும்போது முயற்சியால் முடியாதது ஒன்றும் இல்லை என்றொரு வாக்கியத்தையும் சேர்த்துச் சொல்லிமுடிப்பார்.

கலைந்துபோகும் கனவுச்சித்திரம்- ந.ஜயபாஸ்கரனின் "பித்தளை நாட்கள்"



உருளும் பாறைகளில் பாசி பிடிப்பதில்லை என்பது பழமொழி. குளத்தோரத்திலோ அல்லது ஏரிக்கரையிலோ ஒரே இடத்தில் விழுந்து கிடக்கிற பாறையைச் சுற்றி பாசி படர்ந்துவிடுகிறது. மனிதவாழ்விலும் இப்படி நேர்வதுண்டு. பல ஊர்களைச் சுற்றி பல மனிதர்களைச் சந்தித்து பலவிதமான அனுபவங்களுக்கு ஆளானவர்கள் நல்லதுகெட்டதுபற்றியும் வெற்றிதோல்விபற்றியும் பல விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பார்கள்.  வாழ்வின் மேடுபள்ளங்களைப்பற்றிய தௌiவை அவர்களுடைய அனுபவங்கள் அவர்களுக்குக் கற்றுத்தந்திருக்கும். கல்வியறிவு இல்லையென்றாலும் அனுபவ அறிவு அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும். எது மன்னிக்கக்கூடிய தவறு, எது மன்னிப்புக்கு அப்பாற்பட்ட தவறு என்பதை பின்னணிசார்ந்து ஆராய்ந்து அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். உலக அனுபவமே இல்லாமல் பிறந்த இடத்திலேயே ஆண்டுக்கணக்காக வளர்ந்து, வாழ்ந்து, உழைத்து மறைந்துபோகிறவர்களும் இருப்பார்கள். வாழ்க்கையில் இது ஒரு பெரிய தேக்கம். கல்வியறிவு அல்லது கேட்டலறிவின் துணையாக, இத்தேக்கத்தை உடைத்து தன் மனத்தை விரிவாக்கிக்கொள்கிறவர்களும் உண்டு. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கிறவர்களும் உண்டு.

ஒருவருடைய ஆட்சியில் மக்களனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் அந்த ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்று அழைப்பதுண்டு. அசோகர் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்று வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை தஞ்சைத் தரணியின் பொற்காலம் என்று சொல்வதுண்டு. தனிப்பட்ட மனிதரொருவர் வாழ்வில் இளமைக்காலம் என்பதே பொற்காலமாகும். ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக இருந்தாலும் இளமை நாட்களின் குதூகலத்தக்கு ஈடுஇணையாக எதையும் சொல்லவியலாது. அதனாலேயே ஒருவருடைய இளமைநாட்கள் பொன்னான நாட்கள் என்று அழைக்கப்படுகின்றன.  மகிழ்ச்சிக்குப் பதிலாக அலுப்பும் சலிப்பும் மிகுந்த நாட்களை அழைக்க தனியாக ஒரு சொல்லில்லை. பொன்னுக்கு எதிர்ப்பதமாக பித்தளையைச் சொல்வதைப்போல, பொன்னான நாட்களுக்கு எதிர்ப்பதமாக பித்தளை நாட்கள் என்றொரு புத்தம்புதிய சொல்லை உருவாக்கிச் சொல்லலாம்.

மெல்லமெல்ல நிறம் மங்கி, களிம்பேறி அழுக்குப்பிடித்து பார்ப்பவர்களுக்கு அருவருப்பூட்டுகிற பித்தளையைப்போல, ஆனந்தத்தின் சுவடுகள் மங்கி, அலுப்பும் சலிப்பும் படர்ந்து, மனச்சுமையோடு ஒடுங்கி உட்காரவைத்துவிடும் நாட்கள் பித்தளைநாட்களாகின்றன. உலகில் எல்லாருடைய வாழ்விலும் பொன்னான நாட்களும் உண்டு. பித்தளை நாட்களும் உண்டு. விகித அடிப்படையில் வேண்டுமானால் மாற்றமிருக்கலாம். ஆனால் இரண்டும் கலந்ததாகவே வாழ்க்கை இருக்கிறது. அதே சமயத்தில் பொன்னுக்கும் பித்தளைக்கும் ஒரே வரையறை கிடையாது. ஒருவருக்கு பொன்னெனத் தோன்றுவது மற்றொருவருக்கு பித்தளையாகக் காட்சியளிக்கலாம். ஒருவருடைய பார்வையைப்பொறுத்து அது மாறக்கூடும். இமயமலை வாசம் சிலருடைய வாழ்வில் பொன்னான காலமாக இருக்கலாம். வேறு சிலருடைய வாழ்வில் விரைவில் கழித்துவிட்டுத் திரும்பவேண்டிய வெறும் வேலை நாட்களாக இருக்கலாம். கிணற்றுத்தவளை வாழ்க்கை சிலருக்கு பொன்னுலகமாக இருக்கலாம். வேறு சிலருக்கு அதுவே உள்ளிடற்ற வெறுமைபடிந்த உலகமாக இருக்கலாம். பொன்னை மண்ணாகவும் மண்ணைப் பொன்னாகவும் பார்க்கும் யோகியர்களும் இவ்வுலகில் உண்டு.

ந.ஜயபாஸ்கரன் தன் கவிதையில் ஒரு கடைத்தெருக்காட்சியைக் காட்டுகிறார். அதிலும் குறிப்பாக, ஒரு பாத்திரக் கடைக்குள் கல்லாப்பெட்டிக்கும் தராசுக்கும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற ஒருவரைக் காட்டுகிறார். இதுவரை தான் வாழ்ந்து வந்த நாட்களையெல்லாம் ஒரே கணத்தில் பித்தளை நாட்கள் என்று பட்டப்பெயரிட்டு அழைத்து தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறது அப்பாத்திரம். திடீரென்று அப்படி ஒரு ஞானம் அப்பாத்திரத்துக்கு ஒருநாள் பிறக்கிறது. அதற்கு முதல்நாள்வரை அப்படித் தோன்றவில்லை. கடை வணிகமும் வேடிக்கையும் பொன்னான நாட்களாகவே தோற்றம் தருகின்றன. குறிப்பிட்ட நாளன்று அவன் கடைக்கு வந்து நீளமான குத்துவிளக்கு கேட்டுவிட்டு இல்லையென்ற பதிலைப் பெற்றுக்கொண்டுபோகிறாள் ஒரு கிராமத்துப் பெண். அவள் முகஅடையாளத்தைப் பதித்துக்கொள்ளாத அவன் மனம் அவள் முலைஅடையாளத்தைப் பதித்துவைத்துக்கொண்டு தவியாய்த் தவிக்கிறது.  அங்குதான் பிரச்சனை வேர்கொள்கிறது. கனவிலும் மனஉலகிலும் அதன் சித்திரம் எழுந்துஎழுந்து அவனை நிலைகுலையவைக்கிறது. அதனால் அவன் நினைவுகள் பிறழ்ச்சி கொள்கின்றன. யார் என்ன கொடுக்கவேண்டும், யாருக்கு என்ன தரவேண்டும் என்பதுபோன்ற விவகாரங்கள் எல்லாமே குழம்பி மாற்றமடைகின்றன. அவன் அவனாகவே இல்லாமல் தடுமாறுகின்றான். தன் கனவுச்சித்திரத்தை மீட்டெடுத்துமீட்டெத்து தன் நாட்களை பொன்னான நாட்களாக மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது.  ஆனால் கடைத்தெருவில் சமீப காலத்தில் நடந்த ஒரு வாள்சம்பவமொன்று நினைவிலெழுந்து அவன் கனவுச்சித்திரத்தைக் கிழித்துவிடுகிறது.  எதார்த்த அச்சத்தைப் புறக்கணித்தால் நேரக்கூடிய பின்விளைவுகளை நினைத்து தன் சித்திரத்தை வேகவேகமாகக் கலைத்துவிடுகிறது மனம்.  கனவோடும் இருக்கமுடியவில்லை.  கனவில்லாமலும் இருக்கமுடியவில்லை. கசப்பும் சலிப்பும் மிகுந்த அந்த நாளை பித்தளைநாள் என்று பெயர்சூட்டி ஒதுக்குகிறது.

இக்கவிதையில் இடக்குறிப்புகளையும் மனக்குறிப்புகளையும் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் ஜெயபாஸ்கரன். பித்தளைநாட்கள் என்கிற சொல்லாட்சி கவிதையை மறக்கமுடியாத அனுபவமாக்குகிறது.

*

பித்தளை நாட்கள்

ந.ஜயபாஸ்கரன்

ஞாபகக் கண்ணிகள்
சிதைந்து வருகின்றன
சிறுகச்சிறுக

சமுத்திரம் பாக்கி
இருபத்தாறு ரூபாய் எண்பத்தாறு காசா

கட்கரை நாடார்
கடைந்து தரவேண்டிய
பானை எடை
நூற்றுப் பதினான்கு கிலோவா
நூற்றுப் பதினாறு கிலோவா

தெளிவாகவில்லை

சிட்டையின்
இருப்புப்புள்ளி
பிசகிவிடுகிறது
அடிக்கடி

நிலுவையாகாத
பற்றுவழிக் கணக்கு எண்கள்
கலங்குகின்றன
கனவினுள்

லாங்காக
விளக்குக் கேட்ட
பட்டிக்காட்டுப் பெண்ணின்
முகம்மறந்து
முலை சிதறுகிறது
கனவில்

அங்கம் வெட்டுண்ட
பாணனாய்த்
துடிக்கிறது
பிறழ்ந்த பிரக்ஞை

கடைவீதியின் மூச்சை
அவ்வப்போது
நிறுத்திய
வளர்ந்தான் பாண்டியின் வாள்
துரு வளர்ந்து  
கனவு கிழிக்கத்
தவிக்கிறது

களிம்பேறிய பித்தளைநாட்களின்
கசப்புமட்டும்
இறங்குகிறது


*

அறுபதுகளில் எழுதத் தொடங்கிய கவிஞர்களில் ஒருவர் ந.ஜயபாஸ்கரன். இவருடைய கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அர்த்தநாரி, அவன் , அவள் என்பவை தொகுதிகளின் பெயர்கள்.


Thursday 13 July 2017

ஆனந்தமும் அமைதியின்மையும்- ஆத்மாநாமின் "இன்னும்"


"ஆகாயப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை" என்றொரு வாசகத்தை உணவுமேசைக்கு அருகே எழுதிவைத்திருந்தார் நண்பர். உள்ளே நுழைந்ததுமே அது என் பார்வையில் பட்டுவிட்டதுஉரையாடிக்கொண்டிருக்கும்போது என்னையறியாமல் என் பார்வை அதன்மீது பட்டுப்பட்டுத் திரும்பியதுஏதோ ஒரு கணத்தில் உரையாடலும் அந்தத் திசையில் திரும்பிவிட்டது. "பறவைகளின் மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?" என்று கேட்டார் நண்பர்.  "ஏன் நாம் மகிழ்ச்சியாக இல்லையா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டேன் நான்.  "இன்றைய தேதியில் மகிழ்ச்சிக்கு வாழ்வில் எங்கே இடமிருக்கிறது, சொல்லுங்கள்? ஏதோ ஒன்று எப்போதும் தேவைப்பட்டபடி இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்ற ஓடுகிறதுதேவைப்பட்டது கிடைக்கும்போது தேவையின் அளவும் பெருகிவிடுகிறதுகிடைக்காதபோதோ, அது ஒரு பெரிய மனபாரமாக மாறிவிடுகிறது" என்று சொல்லி பெருமூச்சு வாங்கினார்.

சொல் என்னும் சொல் - அபியின் "சொல்லாதிருத்தலும் எளிது"


நாட்டுப்புறக்கதைகளைக் கேட்பதிலும் சொல்வதிலும் எப்போதும் எனக்கு விருப்பமுண்டு.  ஒரே கதை பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் சொல்லப்படுவதைக் கேட்டு ஆச்சரியமாக இருக்கும். அந்த மாற்றத்துக்கும் அக்கதை வழங்கப்படுகிற வட்டாரத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை உணரமுடிந்திருக்கிறது. கதைகளின் மையத்தைவிட கதைகளின் வகைமைகள் ஆச்சரியமூட்டுபவை. ஒரு வீடு கதைசொல்வதையும் ஒரு மரம் கதைசொல்வதையும் ஒரு கட்டில் கதைசொல்வதையும் கேட்டு ஆச்சரியப்படாமல் எப்படி இருக்கமுடியும். உலகில் உள்ள அஃறிணைப்பொருட்களும் உயர்திணை உயிர்களும் கதைசொல்லிகளாக மாறிமாறி நாட்டுப்புறக்கதைகளில் இடம்பெறுகின்றன. ஒரு கதையே கதைசொல்லியாக இருப்பதை சமீபத்தில் ஒரு கதையில் கேட்டு என் ஆச்சரியம் பலமடங்காகப் பெருகியது.

தாய்மையின் முகங்கள் - கலைச்செல்வியின் சிறுகதைகள்


சமீப காலமாக பொருட்படுத்தி வாசிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி கலைச்செல்வி. அசலான வாழ்வனுபவங்கள் சார்ந்து மானுட மன ஆழத்தைத் தொட முனையும் விழைவை அவர் கதைகள் புலப்படுத்துகின்றன. அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாச் சம்பவங்களும் மிக இயல்பான முறையில் பொருந்தி, கதைகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழங்குகின்றன. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளென கதைகளின் வடிவம் கலைச்செல்விக்கு மிக இயல்பாகவே கைவந்திருக்கிறது.

Monday 3 July 2017

குழந்தைமையும் ஆனந்தமும் - சத்யனின் "மறுபடியும் நான்"


சொற்களை அறியத் தொடங்கிய குழந்தைப்பருவத்தில் வீட்டுக்கு வெளியே என் மகன் பார்த்த முதல்  உயிர் காக்கை. அப்போது ஒரு மாடியறையில் வாடகைக்குக் குடியிருந்தோம்.  பக்கத்திலேயே இருந்த தோப்பிலிருந்து நீளும் மரக்கிளைகள் எங்கள் வீடுவரைக்கும் நீண்டு திரும்பிச் செல்லும்.  எல்லா நேரங்களிலும் அதன்மீது ஒன்றிரண்டு காக்கைகள் காணப்படும்.  அதைப் பார்த்ததுமே ஏதோ அதிசயத்தைப் பார்த்ததுபோல குதித்தோடி வந்து அழைத்துச் சென்று காட்டினான். அதன் பெயர் காக்கை என்று சொல்லிக் கொடுத்தோம்.  அன்றிலிருந்து காக்கை கண்ணில் பட்ட கணத்திலிருந்தே காகா என்று அவன் குதிக்கத் தொடங்கிவிடுவான். 

அன்பென்னும் வளையம்- பழமலையின் "கிளியப்பட்டு ஆயி"


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று தொடங்குகிறது ஒரு திருக்குறள்.  தாழ்போட்டு அடைத்துப் பாதுகாக்கிற செல்வத்தைக் காட்டிலும் எந்தத் தாழாலும் பூட்டிவைக்கமுடியாத அன்பு மிக உயர்ந்தது. பௌதிகமான இருப்பில் காணத்தக்க பொருள் அல்ல அது.  ஆனால் காற்றுப்போல உணரத்தக்க ஓர் உன்னத உணர்வு.  நாம் அடக்க விரும்பினாலும் கடடுப்பாட்டை மீறி கண்ணீராகவும் கண்மலர்ச்சியாகவும் வெளிப்பட்டுவிடும் எளிய உணர்வு. ஒருபோதும் வற்றாத ஜீவநதியாக அது நெஞ்சில் சுரந்து பெருகிப் பாயக்கூடியது. தன் அன்புக்குரியவர்கள் தன்னைச் சுற்றியே எப்போதும் இருக்கவேண்டும் என்று எண்ணுவது மனிதமன இயல்பு. அன்பைப் பெறுவதிலும் அன்பை வழங்குவதிலும் இருக்கிற பேரானந்தம் உலகில் வேறெதற்கும் இல்லை.