பதிற்றுப்பத்து பாடல்தொகையில் எட்டாம் பத்துக்குரிய பாடல்கள் அனைத்தும் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனின் போர்வெற்றியைப் புகழ்ந்து அரிசில் கிழார் பாடியவை. ஒவ்வொரு பாட்டும் தகடூர் என்னும் ஊரை இரும்பொறை முற்றுகையிட்டு அழித்துச் சூறையாடிய வீரத்தை விதந்தோதும் வகையில் எழுதியிருக்கிறார் அரிசில் கிழார். ’பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்பேர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறி’ என்னும் வரிகள் அப்போரின் உச்சக்கட்டக் காட்சியை விவரிக்கின்றன. ’மக்களுக்குப் பயனளிக்கும் பலவிதமான பொருட்களை காட்டின் உட்பகுதிகளில் குவியலாகக் குவித்து காவல் காத்தபடியே தமக்குள் மோதி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தாக்கி, அக்காட்டின் அரணாக விளங்கும் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கிய பெருமைக்குரியவன்’ என்பதுதான் அவ்வரிகளின் பொருள். அப்போது தகடூரை ஆண்டவன் அதியமான். அந்தக் கோட்டையின் பெயர் அதியமான் கோட்டை.