Home

Wednesday 24 April 2024

எஞ்சுதல் - சிறுகதை

 க்கிரமே விழிப்பு வந்துவிட்டாலும் எழுந்திருக்காமலேயே அவர் படுத்தபடி இருந்தது சுக்குக்காப்பிக்காரன் வரட்டும் என்றுதான். ரொம்ப சுலபமாய் உணரும்படியாகவே இருக்கும் அவன் வருகை. கிளங் கிளங் என்று வருகிற தள்ளுவண்டி மணியோசை. ‘சுக்காப்பிஎன்று வார்த்தையை நறுக்கி இழுத்து வீசுகிற குரல். பக்கம்வர  பக்கம்வர  ஸ்ஸ்  என்று ஜாஸ்தியாகிக் கொண்டே போகிற ஸ்டவ் சத்தம். பஸ் சத்தம், லாரி சத்தம், மனிதர்கள் சத்தம் என்று வெறும் சத்தங்களாகிப் போய்விடுகிற பகல் பொழுதுகளிலாவது அடையாளங்கள் தவறிப்போகும். ஆனால், இழுத்துப் போர்த்திய மாதிரி இருக்கிற கருக்கிருட்டில் காப்பிக்காரனின் வருகை அடையாளங்களை வைத்து உணர சாத்தியமான விஷயம்தான். ராத்திரி கடை போட்டு தீபாவளி வாடிக்கைகள் தைக்கிற ஜாபர், கோதண்டம், உஸ்மான்சேட் கடைகளின் மிஷின்கள் எழுப்புகிற சின்ன சத்தத்தையும் மீறி.

மாறாத புன்னகையும் மனவிரிவும்

 

கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி, தனித்தன்மையுடைய சிறுகதைகளை அளித்து, தமிழ்ச்சூழலின் கவனம் பெற்ற இளைய சிறுகதையாளர்கள் என ஒரு பத்து பேரையாவது உடனடியாகச் சொல்லிவிடமுடியும். செந்தில் ஜெகன்னாதன், சுஷில்குமார், மயிலன்.ஜி.சின்னப்பன், ரா.செந்தில்குமார், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், ஐ.கிருத்திகா, கமலதேவி, வைரவன், லோகேஷ் ரகுராமன், அமுதா ஆர்த்தி, பொன்.விமலா என நீளும் அந்தப் பட்டியலில் புதிய இளைய எழுத்தாளராக அஜிதன் தன் முதல் சிறுகதைத்தொகுதி வழியாக இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே மைத்ரி, அல்கிஸா ஆகிய இரு சிறிய நாவல்கள் வழியாக அவர் ஈட்டிவைத்திருக்கும் இடத்தை, மருபூமி என்னும் புதிய சிறுகதைத்தொகுதி உறுதி செய்திருக்கிறது.

Sunday 14 April 2024

தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மாயக்கலை

  

நாம் சாலையில் நடந்து செல்கிறோம். நம் காலடியிலேயே நம் நிழல் விழுகிறது. நம்மோடு சேர்ந்து அதுவும் நடந்து வருகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் , பாலங்கள் எல்லாவற்றுக்கும் நிழல்கள் இருக்கின்றன. நாம் அதையெல்லாம் பெரும்பாலும் கவனிப்பதே இல்லை. அது வெறும் நிழல்தானே, வேறென்ன என்றபடி கடந்துவிடுகிறோம்.

பாகவதரின் பாடல்கள்

  

ஒருநாள் காலையில் என் அப்பாவை திடீரென நினைத்துக்கொண்டேன். ஒரு காரணமும் இல்லாமல் அவரைப்பற்றிய நினைவுகள் ஒன்றை அடுத்து ஒன்றென நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. அவருக்கு திரைப்பாடல்கள் மீது விருப்பம் அதிகம். குறிப்பாக தியாகராஜ பாகவதர் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஓய்வாக இருக்கும்போதும் தன் போக்கில் தனியாக தையல் எந்திரத்தில் மனமூன்றி தைத்துக்கொண்டிருக்கும்போதும் பாகவதர் பாடலை முணுமுணுத்தபடியே வேலை செய்வார்.

Sunday 7 April 2024

மாணிக்கங்களும் கூழாங்கற்களும்

  

ஒரு தொலைபேசி நிலையம் நகரத்தில் வெவ்வேறு மூலைகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுடைய வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. எண்ணற்ற கம்பங்கள் வழியாக நீண்டு செல்லும் கம்பிகள் வழியாகவும் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்ட கேபிள் வழியாகவும் அந்த ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.

நினைவுப்பெட்டகமும் ஒளிவிளக்கும்

  

ஒரு வீட்டில் ஜன்னல் கதவுக்கு மறுபுறத்தில், கம்பிகளுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணில் கூடு கட்டியிருக்கிறது. அதற்குள் அணில் குஞ்சுகள் கீச்சுகீச்சென சத்தம் போடுகின்றன. வீட்டில் இருப்பவர்கள் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறக்க முயற்சி செய்யும்போதெல்லாம் திறக்கவேண்டாம் என எச்சரிக்கைக்குரல் கொடுத்துத் தடுக்கிறார் வீட்டுத்தலைவி. அதே வீட்டின் தோட்டத்தில் நிறைய மரங்கள் உள்ளன. அவ்வப்போது பச்சைக்கிளிகள் அந்த மரங்களில் அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. இளைப்பாறும் பச்சைக்கிளிகளுக்காக பார்வை படும் இடத்தில் கிண்ணத்தில் தண்ணீரும் தட்டில் அரிசியும் வைத்திருக்கிறார் அவர். அந்த வீட்டு வாசலில் ஒரு பெரிய மாமரமும் இருக்கிறது. ஒரு வண்டியில் ஏற்றும் அளவுக்கு அந்த மரத்தில் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. பறிக்கும் பழங்களை அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறார் அவர். பறிக்காத பழங்களை அந்த ஊர்க் குரங்குகள் கூட்டமாக வந்து தினந்தினமும் கும்மாளம் போட்டுத் தின்றுவிட்டுச் செல்கின்றன. இன்று, அந்த அணில்கூடு அப்படியே இருக்கிறது. அந்தக் கிளிகளும் தினமும் வந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. குரங்குகளும் வந்து பழம் தின்றுவிட்டுச் செல்கின்றன. ஆனால் அந்த வீட்டுத்தலைவிதான் இல்லை. அவர் புற்றுநோய்க்கு இரையாகி மறைந்துவிட்டார். அவர் பெயர் சித்ரா.

Sunday 31 March 2024

உறவு - சிறுகதை


கடைசியாய் ஆப்பம் வாங்கித் தின்றவனையே கூடையைத் தூக்கிவிடச் சொல்லித் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் கிழவி.

ஏரிக்கு இந்தப் பக்கம் சாலையாம்பாளையம். அந்தப் பக்கம் வளவனூர். வனாந்தரமாய் நடுவில் வெடித்துக் கிடந்தது பூமி. வருஷத்தில் இரண்டு மாசமோ மூணு மாசமோதான் தண்ணீர் இருக்கும். அதுவும் எவனாவது புண்ணியவான் மனசுவைத்து சாத்தனூர் அணையைத் திறந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. வெறும் மழைத்தண்ணீர்தான் தேங்கி நிற்கும்