க்கிரமே விழிப்பு வந்துவிட்டாலும் எழுந்திருக்காமலேயே அவர் படுத்தபடி இருந்தது சுக்குக்காப்பிக்காரன் வரட்டும் என்றுதான். ரொம்ப சுலபமாய் உணரும்படியாகவே இருக்கும் அவன் வருகை. கிளங் கிளங் என்று வருகிற தள்ளுவண்டி மணியோசை. ‘சுக்காப்பி’ என்று வார்த்தையை நறுக்கி இழுத்து வீசுகிற குரல். பக்கம்வர பக்கம்வர ஸ்ஸ் என்று ஜாஸ்தியாகிக் கொண்டே போகிற ஸ்டவ் சத்தம். பஸ் சத்தம், லாரி சத்தம், மனிதர்கள் சத்தம் என்று வெறும் சத்தங்களாகிப் போய்விடுகிற பகல் பொழுதுகளிலாவது அடையாளங்கள் தவறிப்போகும். ஆனால், இழுத்துப் போர்த்திய மாதிரி இருக்கிற கருக்கிருட்டில் காப்பிக்காரனின் வருகை அடையாளங்களை வைத்து உணர சாத்தியமான விஷயம்தான். ராத்திரி கடை போட்டு தீபாவளி வாடிக்கைகள் தைக்கிற ஜாபர், கோதண்டம், உஸ்மான்சேட் கடைகளின் மிஷின்கள் எழுப்புகிற சின்ன சத்தத்தையும் மீறி.