Home

Tuesday 27 February 2018

மூன்றாவது நதி - சிறுகதை



கைப்பேசியில் மணியொலித்தது. சாரதாவின் அழைப்புக்காகவே உருவாக்கப்பட்ட இசைக்கோவை. எடுத்து காதில் வைத்ததுமேஎப்படி இருக்கிங்க? பிரயாகைலாம் எப்படி இருக்குது?” என்றாள். பதில் சொல்லி முடித்ததும் அந்தப் பக்கத்திலிருந்து நாக்கை சப்புக்கொட்டும் சத்தம் கேட்டது. “நீங்க கெளம்பிப் போயி இன்னியோட ஏழு நாளாயிட்டுது. இன்னும் எட்டு நாளை ஓட்டணும். இப்பவே எங்க எங்கன்னு ரெண்டு கண்ணும் தேடுதுஎன்று சிணுங்கலோடு சொல்வதும் கேட்டது. சட்டென நான் பேச்சின் திசையை மாற்றிசந்திரா எப்படி இருக்கா? பிடிவாதம் பிடிக்காம ஸ்கூல் போறாளா?” என்று கேள்விகளை அடுக்கினேன்.

கதவு திறந்தே இருக்கிறது - எளிமையும் தியாகமும்



பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை எங்கள் பள்ளிப் பருவத்திலேயே விதைத்த தமிழாசிரியர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன். ஒரு வரியைச் சொல்லி, அவ்வரியை எங்கள் மனத்தில் பதியவைக்க ஒரு வகுப்பு நேரம் முழுதும் ஏராளமான விளக்கங்களையும் கதைகளையும் தங்குதடையில்லாமல் அடுக்கிக்கொண்டே செல்லும் ஆற்றல் அவருக்கிருந்தது. படிப்பதனால் என்ன பயன் என்னும் கேள்வியை முன்வைத்து ஒருநாள் எங்களோடு உரையாடினார் அவர். “எழுதப்பட்ட புத்தகம் என்பது ஒரு சிந்தனை. அதைப் படிக்கும்போது அந்தச் சிந்தனை நம்மை வந்தடைகிறது. அதைப்பற்றி யோசிப்பதன் வழியாகவும் விவாதிப்பதன் வழியாகவும் நாம் அதை நம்முடைய சிந்தனையாக ஆக்கிக்கொள்கிறோம். பிறகு நாம் அதைப்பற்றி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்என்றார். தொடர்ந்துநம் மனம் ஒரு பெரிய அணைக்கட்டுபோல. ஒரு பக்கம் ஆற்றிலிருந்து தண்ணீர்வரத்தும் இருக்கவேண்டும். இன்னொரு பக்கம் மதகிலிருந்து வெளியேறிச் சென்றபடியும் இருக்கவேண்டும்என்று சொன்னார்.

Sunday 18 February 2018

புதிய வெளிச்சம் - ஏழு நதிகளின் நாடு


எங்கள் பள்ளியில் எங்களுக்கு வரலாற்றுப் பாடத்தை நடத்தியவர்களில் இரண்டு ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் ராமசாமி. இன்னொருவர் சுப்பையா. இருவருமே அடிப்படையில் வரலாற்றாசிரியர்கள் அல்லர். ஆள் இல்லாத குறைக்கு பாடம் எடுத்தவர்கள். ஆனால் ஒரு வரலாற்றுப்பாடத்தை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு அவர்களே பொருத்தமான இலக்கணம் என்று சொல்லலாம்.  புத்தகத்தையே தொடமாட்டார்கள். ஆனால் பாடத்துக்குரிய பகுதியை ஒரு கதையைச் சொல்வது போல, சம்பவங்களைப் பின்னிப்பின்னிச் சொல்லிக்கொண்டே செல்வார்கள். கேட்கும்போதே நெஞ்சில் பதிந்துவிடும். ஒருவகையில், இந்திய வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆவல் எனக்குள் எழ அவர்களே காரணம். சமீபத்தில் ஒரு வாரமாக விட்டுவிட்டு சஞ்சீவ் சன்யாலின் ஏழு நதிகளின் நாடு புத்தகத்தைப் படித்தபோது பழைய ஆசிரியர்களின் நினைவு வந்துவிட்டது. மனத்துக்கு நெருக்கமான ஓர் ஆசிரியரைப்போல விவரித்துச் செல்லும் சன்யாலின் எழுத்துமுறை இந்தப் புத்தகத்துக்கு மிகப்பெரிய பலம். இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சிவ.முருகேசனுக்கு தமிழுலகம் நன்றி சொல்லவேண்டும்.

கதவு திறந்தே இருக்கிறது - வேட்டை என்னும் மெய்ஞானம்



இரு ஆண்டுகளுக்கு முன்பாக கேதம்பாடி ஜத்தப்பா ரை என்னும் கன்னட எழுத்தாளர் மறைந்துபோனார். துளு, கன்னடம் என இரு மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர் அவர். துளு மொழிக்கான ஓர் அகராதியை பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் உருவாக்கியபோது, ஆறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவரையும் பக்கத்திலேயே வைத்துக்கொண்டே உருவாக்கினார்கள். புழக்கத்திலிருந்து மறியத் தொடங்கிய பல சொற்களை அவர் தன் நினைவிலிருந்தே எடுத்துச் சொன்னார். அந்த அளவுக்கு மொழியில் தோய்ந்தவர். 1916ல் பிறந்த அவர் இன்னும் சில மாதங்கள் வாழ்ந்திருந்தால் நூறாண்டு கண்ட எழுத்தாளராக விளங்கியிருப்பார். சாகித்திய அகாதெமி நிறுவனத்தின் தலைவராக யு.ஆர்.அனந்தமூர்த்தி பதவி வகித்த காலத்தில் அவருக்கு பாஷா சம்மான் விருதை அளித்து கெளரவித்தார். அந்த விருதை அவருடைய வீட்டுக்கே சென்று வழங்கி விழா கொண்டாடினார் அனந்தமூர்த்தி. முப்பதாண்டுகளுக்கு முன்பாக தற்செயலான ஒரு தருணத்தில்தான் நான் அவரைப்பற்றி அறிந்துகொண்டேன். அது ஒரு சுவாரசியமான கதை.

Wednesday 7 February 2018

கடவுள் அமைத்துவைத்த மேடை - சிறுகதை

ஒட்டடைக்கோலை எடுத்து வருவதற்காக தோட்டத்துப்பக்கமாகச் சென்றபோதுதான் வேலியோரமாக நட்டிருந்த முருங்கைக்குச்சியின் பக்கவாட்டில் பொட்டுக்கடலை அளவுக்கு புதிய இலைகள் முளைவிட்டிருப்பதைப் பார்த்தேன். நாக்குநுனிபோல அவை நீண்டிருந்தன. தொட்டுப் பார்ப்பதற்கு எழும் ஆசையைக் கட்டுப்படுத்தியபடி குச்சியின் அருகில் சென்று நின்றேன். நான்கு தளிர்கள். நான்கு சுருள்கள். கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் குருவிகுஞ்சுகளின் அலகுகள்போல அவை குவிந்திருந்தன. அதைப் பார்த்த பரவசத்தில் எனக்கு வானத்தில் பறப்பதுபோல இருந்தது. மறுகணமே அம்மா அம்மா இங்க வந்து பாரேன்என்று சத்தம் போட்டேன். அந்த வேலியில் இதற்கு முன்பு நடப்பட்ட எந்தக் குச்சியும் முளைத்ததே இல்லை. நெல்மணிகளின் அளவில் அவை முளைத்து நிற்கும் தோற்றம் முதல்முறையாக அந்த வரலாற்றைப் பொய்யாக்கியது.

கதவு திறந்தே இருக்கிறது – இசைவு நிகழும் கணம்

புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் நான் பட்டப்படிப்பு படித்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் .இலெ.தங்கப்பா. கவிதையின்பத்தையும் வாழ்க்கையின்பத்தையும் ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டிய அவருடைய வகுப்புகள் என்னுடைய புரிதலின் எல்லையை விரிவாக்கின. அவருடைய வீட்டு மேசையில் ஒருமுறை தன்னுணர்வு என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். புத்தம்புதிய மிகச்சிறிய புத்தகம். எமர்சன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை பெருஞ்சித்திரனார் மொழிபெயர்த்திருந்தார். நான் அதை எடுத்துப் புரட்டியதைக் கவனித்ததும்எமர்சன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான சிந்தனையாளர். நீ அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்என்று சொன்னார் தங்கப்பா. நான் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன்.