ஒட்டடைக்கோலை
எடுத்து வருவதற்காக தோட்டத்துப்பக்கமாகச் சென்றபோதுதான் வேலியோரமாக நட்டிருந்த முருங்கைக்குச்சியின் பக்கவாட்டில் பொட்டுக்கடலை அளவுக்கு புதிய இலைகள் முளைவிட்டிருப்பதைப் பார்த்தேன். நாக்குநுனிபோல அவை நீண்டிருந்தன. தொட்டுப் பார்ப்பதற்கு எழும் ஆசையைக் கட்டுப்படுத்தியபடி குச்சியின் அருகில் சென்று நின்றேன். நான்கு தளிர்கள். நான்கு சுருள்கள். கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் குருவிகுஞ்சுகளின் அலகுகள்போல அவை குவிந்திருந்தன. அதைப் பார்த்த பரவசத்தில் எனக்கு வானத்தில் பறப்பதுபோல இருந்தது. மறுகணமே “அம்மா அம்மா இங்க வந்து பாரேன்” என்று சத்தம் போட்டேன். அந்த வேலியில் இதற்கு முன்பு நடப்பட்ட எந்தக் குச்சியும் முளைத்ததே இல்லை. நெல்மணிகளின் அளவில் அவை முளைத்து நிற்கும் தோற்றம் முதல்முறையாக அந்த வரலாற்றைப் பொய்யாக்கியது.