கடந்த நூற்றாண்டில் தமிழர்களின் மனத்தில்
ஆழமாக வேரூன்றி நிலைபெற்ற முக்கியமான கவிஞர்கள் மூவர். கம்பர், வள்ளுவர், இளங்கோ என
அவர்களை தன் கவிதையில் வரிசைப்படுத்தியிருக்கிறார் பாரதியார். கம்பராமாயணத்தையும் திருக்குறளையும்
சிலப்பதிகாரத்தையும் நினைக்கும்போதெல்லாம், அவ்விலக்கியங்களைப்பற்றி மீண்டும்மீண்டும்
பேசியும் எழுதியும் அவற்றை மறக்கவியலாத படைப்புகளாக மாற்றிய அறிஞர்களை நினைக்காமல்
இருக்கமுடியாது. அவ்வகையில் சிலப்பதிகாரத்துடன் இணைந்து நீண்ட காலமாக நம் நெஞ்சில்
பதிந்துபோயிருக்கும் ஒரு பெயர் ம.பொ.சி. அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களின்
பட்டியலில் சிலப்பதிகாரத்தைப் பற்றிய புத்தகங்கள் மட்டும் இருபதுக்கும் மேலானவை. கம்பராமாயணம்,
திருக்குறள், வள்ளலார், பாரதியார், காந்தியம் பற்றியும் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
தனது அரசியல் போராட்டங்களைப்பற்றி விரிவான வகையில் பதிவு செய்திருக்கிறார். வரலாற்றின்
அழுத்தமான தடங்களை அதன் பக்கங்களில் காணமுடியும்.
Saturday 20 February 2016
Thursday 11 February 2016
புதைந்த காற்று – மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரை
தற்செயலாக கர்நாடகத்தின் உள்பகுதியில் அமைந்த ஓர் ஊரில் பயணம்
செய்துகொண்டிருந்தபோது ஏராளமானவர்கள் கூட்டமாக கூடி நின்று ஒரு வீதி நாடகத்தைப் பார்ப்பதைக்
கவனிக்க நேர்ந்தது. அந்த வீதி நாடகக்குழுவினர் பாடிய பாடல்கள் வழியாகவே நான் முதன்முதலாக
கவிஞர் சித்தலிங்கையாவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். அவருடைய பாடல் தொகுதியைப் படித்த
பிறகு, இன்னும் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளமுடிந்தது. தலித்துகள் வாழ்நிலை, தலித்துகள்
படும் அவமானம், தலித்துகள் வேதனை, தலித்துகளின் கனவு, தலித்துகள் எழுச்சி ஆகியவை அவருடைய
பாடல்களின் மையப்புள்ளிகளாக இருந்தன. நூற்றுக்கணக்கிலான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில்
அப்பாடல்கள் பாடப்படும்போது உருவாகும் மன எழுச்சியை பலமுறை நான் கண்ணாரப் பார்த்ததுண்டு.
மின்சாரம் பாய்ந்ததுபோல அந்த எழுச்சி மானுடரின் நெஞ்சினூடாக பாய்ந்து செல்லும். அவரைச்
சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்றெல்லாம் அப்போது நான் நினைத்தே
பார்த்திராத செய்தி. பத்தாண்டுகள் கழித்து எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து, அவரைச் சந்திக்கச்
சென்றபோது அப்பாடல்களின் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அன்பானதொரு புன்னகை
வழியாகவும் கண்மலர்தல் வழியாகவும் அவர் அதை உள்வாங்கியபடி என் கைகளைப்பற்றிய கணத்தில்
அவரை நான் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். அன்றைய எங்கள் உரையாடலை உற்சாகத்துடன் தொடங்க
அக்கணம் மிகவும் உதவியது. அந்த நேர்காணல் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ’நிறப்பிரிகை’ என்னும் இதழில் பிரசுரமானது.
Wednesday 3 February 2016
சிறந்த மனிதர்கள் - கட்டுரை
தொலைக்காட்சியில் மாலைச்
செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. மாநில அரசியல்
நிகழ்ச்சிகள், மத்திய அரசின் சில புதிய
திட்டங்கள், அங்கங்கே நிகழும் மக்கள்
போராட்டங்கள்,
வெடிகுண்டு வன்முறைகள், கலவரங்கள், அடக்குமுறைகள்,
கைதுகள், விசாரணைகள், உயிர்ப்பலிகள் என ஒன்றை அடுத்து ஒன்றென காட்சிகள் நகர்ந்துகொண்டே இருந்தன.
அவற்றின் தொடர்ச்சியாக கர்நாடகத்தின் சிறந்த மனிதராக சமீபத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மேடை நடுவே அமரவைத்து முதல்வரும் மற்ற அமைச்சர்களும்
மாலை மரியாதைகள் செய்து விருதையளிக்கும் காட்சி ஒளிபரப்பானது. செய்தியின் மையம்
மனத்தை ஈர்க்கவே கூடுதலான கவனத்துடன் பார்த்தேன்.
Subscribe to:
Posts (Atom)