
தற்செயலாக கர்நாடகத்தின் உள்பகுதியில் அமைந்த ஓர் ஊரில் பயணம்
செய்துகொண்டிருந்தபோது ஏராளமானவர்கள் கூட்டமாக கூடி நின்று ஒரு வீதி நாடகத்தைப் பார்ப்பதைக்
கவனிக்க நேர்ந்தது. அந்த வீதி நாடகக்குழுவினர் பாடிய பாடல்கள் வழியாகவே நான் முதன்முதலாக
கவிஞர் சித்தலிங்கையாவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். அவருடைய பாடல் தொகுதியைப் படித்த
பிறகு, இன்னும் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளமுடிந்தது. தலித்துகள் வாழ்நிலை, தலித்துகள்
படும் அவமானம், தலித்துகள் வேதனை, தலித்துகளின் கனவு, தலித்துகள் எழுச்சி ஆகியவை அவருடைய
பாடல்களின் மையப்புள்ளிகளாக இருந்தன. நூற்றுக்கணக்கிலான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில்
அப்பாடல்கள் பாடப்படும்போது உருவாகும் மன எழுச்சியை பலமுறை நான் கண்ணாரப் பார்த்ததுண்டு.
மின்சாரம் பாய்ந்ததுபோல அந்த எழுச்சி மானுடரின் நெஞ்சினூடாக பாய்ந்து செல்லும். அவரைச்
சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்றெல்லாம் அப்போது நான் நினைத்தே
பார்த்திராத செய்தி. பத்தாண்டுகள் கழித்து எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து, அவரைச் சந்திக்கச்
சென்றபோது அப்பாடல்களின் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அன்பானதொரு புன்னகை
வழியாகவும் கண்மலர்தல் வழியாகவும் அவர் அதை உள்வாங்கியபடி என் கைகளைப்பற்றிய கணத்தில்
அவரை நான் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். அன்றைய எங்கள் உரையாடலை உற்சாகத்துடன் தொடங்க
அக்கணம் மிகவும் உதவியது. அந்த நேர்காணல் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ’நிறப்பிரிகை’ என்னும் இதழில் பிரசுரமானது.
