Home

Showing posts with label சித்தலிங்கையா. Show all posts
Showing posts with label சித்தலிங்கையா. Show all posts

Sunday, 12 September 2021

சித்தலிங்கையாவுக்கு அஞ்சலி

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழிலக்கியச் சூழலில் தலித் இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமடையத் தொடங்கின. அதைப்பற்றிய உரையாடல்கள் எல்லா இடங்களிலும் நிகழ்ந்தன. 1991இல் கோமல் சுவாமிநாதனைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான சுபமங்களா பல எழுத்தாளர்களுடைய விரிவான நேர்காணல்களைப் பிரசுரித்தது. எழுத்தாளர்களை ஒரு கருத்தியல் தரப்பாக தமிழ்ச்சூழலில் அந்த நேர்காணல்கள் முன்னிறுத்தின. வாசிப்புப்பழக்கம், எழுத்துக்கான களத்தேர்வு, மொழியின் பயன்பாடு, இளமைக்கால வாழ்க்கை, பிடித்த படைப்புகள், பிடித்த ஆளுமைகள் சார்ந்து ஒவ்வொரு எழுத்தாளரிடமும் கேட்கப்பட்ட கேள்விப்பட்டியல் வெவ்வேறு விதமாக இருந்தாலும் தலித் இலக்கியம் பற்றிய ஒரு கேள்வி மட்டும் அந்த நேர்காணல்களில் பொதுவாக இருந்தது. தலித் இலக்கியம் பற்றிய எழுத்தாளர்களின் எண்ணங்களைத் தொகுத்தளிப்பதன் வழியாக அதைப்பற்றிய வரையறையை செழுமைப்படுத்த முடியும் என்று கோமல் நம்பினார். மராட்டிய மொழியில் தலித் இலக்கியம், கன்னட மொழியில் தலித் இலக்கியம் போன்ற கட்டுரைகளை, அம்மொழியுடன் தொடர்புடைய  நண்பர்கள் வழியாகப் பெற்று அவ்வப்போது சுபமங்களாவில் வெளியிட்டார். நாளடைவில் இலக்கியச் சந்திப்புகளில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியது.

Monday, 12 July 2021

சித்தலிங்கையா : நட்பார்ந்த கைகளும் புன்னகையும்

 

1982இல் கர்நாடகத்தில் ஹொஸபேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்கு காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்திவந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார். அவருக்கு நாடகங்கள் மீது தணியாத ஆர்வமிருந்தது.  ஒருநாள் நான் முன்வரிசையில் இருந்த ஒரு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பின்வரிசை மேசையைச் சுற்றி ஆறேழு இளைஞர்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு பாட்டின் வரிகளை ஒருமித்த குரலில் பாடிப்பாடி பயிற்சி செய்தார்கள். எல்லோருமே குருஷாந்தப்பாவின் நண்பர்கள்.

Sunday, 4 July 2021

சித்தலிங்கையா : நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை

 

11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர், கர்நாடகத்தின் முதல்வர், அமைச்சர்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலித் அமைப்பினர், சமூக ஆய்வாளர்கள், பல்வேறு கட்சியினர் என அனைவருமே இரங்கல் செய்தி விடுத்தனர்.

Sunday, 20 June 2021

சித்தலிங்கையா : எளியவர் போற்றிய கலைஞன்

 

சித்தலிங்கையா 1954 ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் மாகடிக்கு அருகில் உள்ள மஞ்சணபெலெ என்னும் ஊரில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய பள்ளிப்படிப்பும் கல்லூரிப்படிப்பும் பெங்களூரில் அமைந்தன. முதுகலைப்படிப்பில் கன்னட மொழியை பாடமாக எடுத்து தங்கப்பதக்கத்துடன் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேறி கன்னட ஆய்வு மையத்தில் இணைந்தார். பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, எண்ணற்ற கள ஆய்வுகளுக்குப் பிறகு நாட்டுப்புறத் தெய்வங்கள் என்னும் தலைப்பில் அவர் எழுதிய ஆய்வேடு இன்றளவும் கன்னட ஆய்வாளர்களிடையில் ஒரு வழிகாட்டி நூலாக விளங்குகிறது.

Tuesday, 12 September 2017

வாழ்வின் தடங்கள் - சித்தலிங்கையாவின் தன்வரலாறு



வாழ்வின் தடங்கள் சித்தலிங்கையாவுடைய தன்வரலாற்று நூலின் இரண்டாவது பகுதி.  இதன் முதல் பகுதி ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் வெளிவந்தது. இரண்டாவது பகுதியான நூலை மொழிபெயர்த்து முடித்ததும் அதன் கையெழுத்துப் பிரதியை எனக்கு நெருக்கமான நண்பரிடம் படித்துப் பார்க்கக் கொடுத்திருந்தேன். 

Thursday, 11 February 2016

புதைந்த காற்று – மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரை

  





தற்செயலாக கர்நாடகத்தின் உள்பகுதியில் அமைந்த ஓர் ஊரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஏராளமானவர்கள் கூட்டமாக கூடி நின்று ஒரு வீதி நாடகத்தைப் பார்ப்பதைக் கவனிக்க நேர்ந்தது. அந்த வீதி நாடகக்குழுவினர் பாடிய பாடல்கள் வழியாகவே நான் முதன்முதலாக கவிஞர் சித்தலிங்கையாவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். அவருடைய பாடல் தொகுதியைப் படித்த பிறகு, இன்னும் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளமுடிந்தது. தலித்துகள் வாழ்நிலை, தலித்துகள் படும் அவமானம், தலித்துகள் வேதனை, தலித்துகளின் கனவு, தலித்துகள் எழுச்சி ஆகியவை அவருடைய பாடல்களின் மையப்புள்ளிகளாக இருந்தன. நூற்றுக்கணக்கிலான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் அப்பாடல்கள் பாடப்படும்போது உருவாகும் மன எழுச்சியை பலமுறை நான் கண்ணாரப் பார்த்ததுண்டு. மின்சாரம் பாய்ந்ததுபோல அந்த எழுச்சி மானுடரின் நெஞ்சினூடாக பாய்ந்து செல்லும். அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்றெல்லாம் அப்போது நான் நினைத்தே பார்த்திராத செய்தி. பத்தாண்டுகள் கழித்து எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து, அவரைச் சந்திக்கச் சென்றபோது அப்பாடல்களின் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அன்பானதொரு புன்னகை வழியாகவும் கண்மலர்தல் வழியாகவும் அவர் அதை உள்வாங்கியபடி என் கைகளைப்பற்றிய கணத்தில் அவரை நான் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். அன்றைய எங்கள் உரையாடலை உற்சாகத்துடன் தொடங்க அக்கணம் மிகவும் உதவியது. அந்த நேர்காணல் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ’நிறப்பிரிகை’ என்னும் இதழில் பிரசுரமானது.

Monday, 2 March 2015

ஊரும் சேரியும்

சித்தலிங்கையாவின்ஊரும் சேரியும்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக கன்னடக் கவிஞரும் தலித் சங்கர்ஷ சமிதியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான சித்தலிங்கையாவின் தன்வரலாற்று நூல்ஊரும் சேரியும்என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை உடனே நான் தமிழில் மொழிபெயர்த்தேன். 1996 ஆம் ஆண்டில் அது விடியல் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.கிளாஸிக் தன்வரலாறு வரிசைஎன்கிற வரிசையின் கீழ் நல்ல ஓவியங்களுடன் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக இப்போது வெளிவந்துள்ளது.



நூல் கிடைக்குமிடம்
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629 001
விலை. ரூ.160

‘ஊரும் சேரியும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாள் எங்கள் முகாமிலிருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் நாற்பது ஐம்பது பேர் வட்டமாகக் கூடியிருக்க ஒருவர் பாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருக்கு நல்ல குரல்வளம் இருந்தது. அவருடைய வசீகரமான குரலும் பாடலின் வரிகளும் தொடர்ந்து செல்லவிடாமல் என்னை அங்கேயே தடுத்துவிட்டன. கூட்டத்தில் ஒருவனாக நின்று நானும் அந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கினேன். ஆறேழு பாடல்களைப் பாடி முடிப்பதற்குள் நூறு பேருக்கு மேல் சேர்ந்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து வீதி நாடகமொன்று நடைபெற்றது. ஏறத்தாழ அரைமணி நேரம். அது ஒரு சாதாரணமான பிரச்சார நாடகம். ஆனாலும், ஒருவர்கூட அங்கிருந்து நகராமல் அனைவரும் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகத்திலும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. நாடகம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் தருணத்தில் நாடகக்குழுவினரிடம் சிறிது நேரம் பேசினேன். கர்நாடகத்தில் அக்காலத்தில் வீதி நாடகங்களுக்குப் பேர்போன சமுதாயா குழுவின் பாதிப்பால் அவர்கள் ஒரு குழுவைத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார்கள். பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் கவிஞர் சித்தலிங்கையா எழுதியவை என்றும் குறிப்பிட்டார். அங்கேயேஹொலெமாதிகர ஹாடுஎன்னும் சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அன்றைய பயணம் முழுக்க அவருடைய பாடல்களைப் படிப்பதிலும் நாடகக்குழுவினர் பாடிய தாளக்கட்டுக்கு இசைவாக அவ்வரிகளை வாய்க்குள்ளேயே முணுமுணுப்பதிலும் கழிந்தது.யாருக்கு வந்தது, எங்கே வந்தது, நாற்பத்தியேழின் சுதந்திரம்?’ என ஆவேசமும் அப்பாவித்தனமும் இணைந்து தொனிக்க, அன்று நான் கேட்ட பாட்டின்  குரல் இன்னும் என் நெஞ்சில் ஒலித்தபடியே உள்ளது. சித்தலிங்கையா என்னும் ஆளுமையின் பெயரையும் அவருடைய கவிதையையும் இப்படிப்பட்ட ஒரு கணத்தில்தான் நான் தெரிந்துகொண்டேன்.

Friday, 13 February 2015

அணிதிரட்டிய கவிதைகள்

சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை

கன்னடச் சிந்தனைமரபில் தலித்துகளின் பங்களிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வசனக்காரர்களின் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. சாதிகளைத் துறந்த ஒரு மேலான சமூகத்தைக் கனவு கண்டார் பசவண்ணர். அதற்காக எல்லாச் சமூகத்தினரையும் அரும்பாடுபட்டு ஒருங்கிணத்தார். அவர் முன்னெடுத்துச் சென்ற சரணர் இயக்கம் உழைப்பின் வழியாகவும் மானுட உறவுகள் வழியாகவும் சமூகமாற்றத்தைச் சாத்தியப்படுத்த முயற்சி செய்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமகார ஹரலய்யா, காக்கய்யா, மாதார சென்னய்யா போன்றோர் அவருடைய சமகாலத்தில் இயங்கிய வசனக்காரர்கள். வசன இலக்கியம் என்னும் பெருந்தொகுதியில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பிற்காலத்தில் இவ்வியக்கம் வீரசைவத் தத்துவமாக பெயர்பெற்றாலும், அது உருவாகி நிலைபெற்ற காலத்தில் உயர்ந்த நெறிகளைக் கொண்ட நீதிமுறையை நிறைவேற்ற அவ்வியக்கம் பாடுபட்டது. துரதிருஷ்டவசமாக, அதன் இறுதிக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீண்டும் விளிம்பைநோக்கித் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பது வரலாறு. பக்தி இலக்கியக் காலகட்டத்தில் கனகதாசரின் பங்களிப்பு போற்றுதற்குரியதென்றாலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் அது எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியும் தன் நிரந்தரத்துவத்துக்காக இந்தியர்களின் சாதிமத விஷயங்களில் தலையிடுவதில்லை என்கிற நிலைபாட்டில் உறுதியாக நின்றுவிட்டது. மேற்கத்திய கல்வியின் தாக்கத்தால் உருவான ஆர்யசமாஜமும் பிரம்ம சமாஜமும் பல சீர்திருத்த நடவடிக்கைகளில் முனைப்போடு இயங்கியபோதும், அவை எதுவுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலைகளில் எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை.