ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்து பீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சருமமெனக் கொண்டு ஒளிரும் ஆற்றலையும் தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அந்த அழகியல் வழியாகவே அக்கவிதை இம்மண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. அவ்வழகியலால் தூண்டப்பட்டு ஒரு வாசகனின் நெஞ்சில் எழும் எண்ணங்கள் வெவ்வேறு தளங்களைத் தொட்டுத்தொட்டு அலையும்தோறும் உருவாகும் மன எழுச்சி, கவிஞரின் மன எழுச்சிக்கு இணையானதொரு அனுபவம். கவிஞரும் கவிதை வாசகரும் இணைந்து நிற்கும் அபூர்வமான புள்ளி அது.