Home

Showing posts with label கவிதைத்தொகுதி. Show all posts
Showing posts with label கவிதைத்தொகுதி. Show all posts

Sunday, 30 November 2025

மகத்தான அனுபவத்தை நோக்கி

 

ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்து பீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சருமமெனக் கொண்டு ஒளிரும் ஆற்றலையும் தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அந்த அழகியல் வழியாகவே அக்கவிதை இம்மண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. அவ்வழகியலால் தூண்டப்பட்டு ஒரு வாசகனின் நெஞ்சில் எழும் எண்ணங்கள் வெவ்வேறு தளங்களைத் தொட்டுத்தொட்டு அலையும்தோறும் உருவாகும் மன எழுச்சி, கவிஞரின் மன எழுச்சிக்கு இணையானதொரு அனுபவம். கவிஞரும் கவிதை வாசகரும் இணைந்து நிற்கும் அபூர்வமான புள்ளி அது.

Friday, 13 February 2015

அணிதிரட்டிய கவிதைகள்

சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை

கன்னடச் சிந்தனைமரபில் தலித்துகளின் பங்களிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வசனக்காரர்களின் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. சாதிகளைத் துறந்த ஒரு மேலான சமூகத்தைக் கனவு கண்டார் பசவண்ணர். அதற்காக எல்லாச் சமூகத்தினரையும் அரும்பாடுபட்டு ஒருங்கிணத்தார். அவர் முன்னெடுத்துச் சென்ற சரணர் இயக்கம் உழைப்பின் வழியாகவும் மானுட உறவுகள் வழியாகவும் சமூகமாற்றத்தைச் சாத்தியப்படுத்த முயற்சி செய்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமகார ஹரலய்யா, காக்கய்யா, மாதார சென்னய்யா போன்றோர் அவருடைய சமகாலத்தில் இயங்கிய வசனக்காரர்கள். வசன இலக்கியம் என்னும் பெருந்தொகுதியில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பிற்காலத்தில் இவ்வியக்கம் வீரசைவத் தத்துவமாக பெயர்பெற்றாலும், அது உருவாகி நிலைபெற்ற காலத்தில் உயர்ந்த நெறிகளைக் கொண்ட நீதிமுறையை நிறைவேற்ற அவ்வியக்கம் பாடுபட்டது. துரதிருஷ்டவசமாக, அதன் இறுதிக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீண்டும் விளிம்பைநோக்கித் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பது வரலாறு. பக்தி இலக்கியக் காலகட்டத்தில் கனகதாசரின் பங்களிப்பு போற்றுதற்குரியதென்றாலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் அது எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியும் தன் நிரந்தரத்துவத்துக்காக இந்தியர்களின் சாதிமத விஷயங்களில் தலையிடுவதில்லை என்கிற நிலைபாட்டில் உறுதியாக நின்றுவிட்டது. மேற்கத்திய கல்வியின் தாக்கத்தால் உருவான ஆர்யசமாஜமும் பிரம்ம சமாஜமும் பல சீர்திருத்த நடவடிக்கைகளில் முனைப்போடு இயங்கியபோதும், அவை எதுவுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலைகளில் எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை.