Home

Friday 31 March 2017

இயற்கை என்னும் புதிர்- ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"



வாழ்க்கையில் நமக்குள்ள விருப்பங்கள் ஏராளம்.  நம் எல்லா விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று உண்மையிலேயே நாம் ஆசைப்படுகிறோம்.  விருப்பங்கள் நிறைவேறுவதால் உண்டாகும் மகிழ்ச்சியும் மனநிறைவும் முக்கியம் என்பது நம் எண்ணம்.  மகிழ்ச்சியால் நம் மனத்தை நிறைவு செய்வது ஓர் இலக்காக இருந்து நம்மை இயக்குகிறது.  இலக்கை அடைந்துவிட்ட நிலையில் நம் ஆனந்தத்துக்குக் குறைவெதுவுமில்லை.  ஏதோ சிற்சில காரணங்களால் இலக்குப் புள்ளியை அடையமுடியாமல் போனால், அது வழங்கும் துயரம் நம்மைச் சிதைத்துத் தூள்தூளாக்கிவிடுகிறது.  வாழ்க்கையில் நிகழக்கூடிய ஒவ்வொன்றையும் அனுபவமாக எதிர்கொள்ளாமல் மகிழ்ச்சி தரக்கூடிய விளைவுகள் என்றும் மகிழ்ச்சியைத் தராத விளைவுகள் என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறோம்.  மகிழ்ச்சியின் பின்னால்  செல்லும் பயணமாக வாழ்க்கை சுருங்கிவிடுகிறது.

இசையும் இரைச்சலும்- கல்யாண்ஜியின் "டவுன் ஹால் ரோட்"


காசியில் கங்கைக்கரையில் கண்ட காட்சி இன்னும் அப்படியே மனத்தில் உறைந்துகிடக்கிறது.  நகரின் பிரதான சாலையை விட்டு விலகியதும் ஒரு ரிக்ஷா அல்லது ஆட்டோ செல்கிற அளவுக்குமட்டுமே உள்ள குறுகலான சந்துகளே ஏராளம்.  எல்லாமே நீளம் குறைவான சந்துகள். ஏழெட்டு சந்துகள் வளைந்துவளைந்து திரும்பி நிற்கிற இடத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கும் ஓர் அரசமரம். மரத்தடியையொட்டி தாழ்வாக இறங்கும் படிகள்.  எதிரில் வேகமாக புரண்டோடும் கங்கை.  கரையோரத் தூணோடு இணைத்துக் கட்டப்பட்ட படகில் நின்றபடி கரையோரமாக உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட சுடுகாடுகளையும் சுற்றிக்காட்டுவதாகச் சொல்லி ஆட்களை அழைக்கிற படகோட்டி.  கரையிலேயே மூன்று ஆள் உயரத்துக்கு வைக்கோல்போர்போல அடுக்கப்பட்ட விறகுக் கட்டைகள்.  

Monday 20 March 2017

காத்திருத்தலும் ஒத்திப்போடுதலும் - சுந்தர ராமசாமியின் "வருத்தம்"



     முடிவெடுப்பதில் எப்போதும் இரண்டு வழிமுறைகள் உண்டு.  எவ்வளவு சிக்கல்கள் நிறைந்த விஷயமானாலும் உடனடியாக ஒரு முடிவையெடுப்பது ஒரு வழிமுறை.  உச்சத்திலிருக்கும் பிரச்சனையின் வெப்பம் தணியும்வரை முடிவெடுப்பதை ஒத்திப்போடுவது என்பது இன்னொரு வழிமுறை.  அரசியல் தளத்திலிருந்து குடும்பத்தளம்வரைக்கும் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் இந்த இரண்டு வழிமுறைகளையொட்டியே இருக்கும் . இது சரி, இது தவறு என்று கறாரான விமர்சனத்தை இந்த வழிமுறைகள்மீது வைக்கமுடியாது.  சில பிரச்சனைகளில் உடனடியாக எடுக்கப்பட்ட முடிவுகள் விவேகம் நிறைந்ததாகவும் இருக்கலாம்.  சில முடிவுகளை இன்னும் சிறிது காலம் கழிந்தபிறகு எடுத்திருக்கலாம் என்று சொல்லி ஆற்றிக்கொள்ளும் நிலைமையும் வரலாம்.  இரண்டுக்குமே இவ்வாழ்வில் சாத்தியப்பாடுகள் உண்டு.  ஆத்திரத்தில் அறுத்துப்போட்ட மூக்கை அன்பாகச் சொல்லி ஒட்டவைத்துவிடமுடியாது என்பது தினமும் நாம் கேட்கிற ஒரு பழமொழி.  சொந்த வாழ்வில் எடுக்கப்படும் முடிவுகளையே ஒன்றுக்குப் பலமுறை யோசித்துவிட்டு எடுக்கவேண்டும் என்கிற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்ப்பிரச்சனையான யுத்தம்போன்ற செயல்பாட்டில் நூறுமுறை யோசித்தல் முக்கியம்.  முடிவெடுக்கும் கணத்தை எவ்வளவு முறை ஒத்திப்போட்டாலும் தகும்.

நான் கடவுள் - எஸ். வைத்தீஸ்வரனின் உரிமை



       "பூமியிலே நீ கடவுள் இல்லையென்று புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் பாரதியார்.   சர்வமத சமரசத்தை முன்னிட்டு நிகழ்த்தும் உரையாடலின் ஒரு பகுதியாக இந்த வரி சொல்லப்படுகிறது.  தன் கடவுள் அனைவரைவிடவும் உயர்வானவர் என்று பெருமையும் உரிமையும் பாராட்டும்போது மற்றவர்களின் கடவுளரைப்பற்றிய ஓர் இகழ்ச்சியுணர்வு பிறப்பதற்கான வழி தானாகவே உருவாகிவிடுகிறது. இகழ்ச்சியுணர்வு என்பது எந்த அளவுக்கு பிறழ்ந்த நிலையோ, அதே அளவுக்கு உயர்வுணர்வும் பிறழ்ந்த நலையே.  இயல்புநிலை என்பது நான்கடவுள் என்னும் உணர்வுநிலை.  அல்லது இறையம்சத்துடன் நான் இருக்கிறேன் என்னும் நிலை.  

Tuesday 14 March 2017

பிரசாதம் - சிறுகதை



இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் பெயரைத் தாங்கி அந்தத் தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லாத பள்ளிக்கூடம். நாலரைக்கு கடைசி மணி அடித்ததும் பிள்ளைகள் எல்லோரும் கன்றுக்குட்டிகள்போல வாசலை நோக்கி ஓடினார்கள். விதவிதமான உயரங்களில் விதவிதமான ஓசைகளை எழுப்பியபடி அவர்கள் ஓடியது விசித்திரமாக இருந்தது. குதிரை, யானை, பூனை, கோழி, ஆடு என எல்லாவிதமான விலங்குகளின் சத்தங்களும் அப்போது கேட்டது. ஆனால்  ஐந்தாவது வகுப்பு பி செக்‌ஷன் வீரமுத்து மட்டும் ஓடவில்லை. சத்தம் போடவும் இல்லை. கடைசி மாணவன் ஓடி வெளியேறுகிறவரைக்கும் வகுப்பு வாசலில் நின்று வேடிக்கை பார்த்தான்.

Friday 10 March 2017

பேதமையும் பிரியமும் - கட்டுரை

  
கலாப்ரியாவின் ”பிரிவுகள்”

எட்டுப் பிள்ளைகள் கண்முன்னால் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் எப்போதோ ஒரு காலத்தில் பிறந்து சில நாட்களே உயிருடன் இருந்து, பிறகு மரணமெய்திவிட்ட  ஒன்பதாவது பிள்ளையை நினைத்துநினைத்து தினமும் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டு அழும் அல்லது பேசிப்பேசி துயராற்றிக்கொள்ளும்  ஒரு தாய் எல்லா இடங்களிலும் இருப்பாள்அளவற்ற செல்வம் புரள்கிற நிலையில்கூட என்றோ ஒருநாள் தன் கவனக்குறைவால் பறிகொடுத்துவிட்ட சிறுதொகையின்  இழப்பைத் துயரத்துடன் பகிர்ந்துகொள்ளும் நண்பன் நம் எல்லாருக்குமே இருக்கக்கூடும்பிரிவு உறுதி என உணர்ந்த ஆணின் அல்லது பெண்ணின்  உறக்கத்தையும் உயிர்ப்பையும் பலிவாங்கிவிடுகிறது இழப்புணர்ச்சிஇழப்பின் வலி பெரிது. சின்னதோ பெரியதோ, வாழ்வில் எந்த இழப்பும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.

மனநிறைவும் மனச்சுமையும் - கட்டுரை


வண்ணநிலவனின் "குளத்துப்புழை ஆறு"
 

      முதன்முறையாக தாஜ்மகாலைப் பார்த்தபோது அதன் அழகில் மனம் பறிகொடுத்து அப்படியே ஒருகணம் நின்றுவிட்டேன்தொடர்ந்து பார்த்தபடியே இருக்கும் ஆசையில் யாருக்கும் தொந்தரவு தராதவகையில் நடைபாதையை விட்டுவிலகி நின்று பார்க்கத் தொடங்கினேன்திரும்பிய கணத்தில் கைக்குட்டை விற்கிற ஒரு சிறுமியின்மீது பார்வை படிந்ததுபயணியர் அனைவரும் வளாகத்தில் நுழைந்த கணத்திலிருந்து தாஜ்மகாலின்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தபடியே இருக்க, அவள் பார்வை மட்டும் அந்தப் பயணிர்மீதே இருந்தது. "மூணு ரூபாய்க்கு ஒன்னு, பத்து ரூபாய்க்கு நாலு" என்று மந்திரம்போல திரும்பத்திரும்பச் சொன்னபடி புதுப்புதுப் பயணியரை நாடி நடந்துகொண்டே இருந்தாள்பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்திழுக்கிற உலக அதிசயம் அவனை ஒரு விழுக்காடு அளவுகூட அசைக்கவில்லைஅந்தத் திசையைக்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லைகைக்குட்டைகளை வாங்கும் முகத்தை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிப்பதிலேயே அவள் பார்வை குறியாக இருந்தது