கடந்த நூற்றாண்டில் தமிழர்களின் மனத்தில்
ஆழமாக வேரூன்றி நிலைபெற்ற முக்கியமான கவிஞர்கள் மூவர். கம்பர், வள்ளுவர், இளங்கோ என
அவர்களை தன் கவிதையில் வரிசைப்படுத்தியிருக்கிறார் பாரதியார். கம்பராமாயணத்தையும் திருக்குறளையும்
சிலப்பதிகாரத்தையும் நினைக்கும்போதெல்லாம், அவ்விலக்கியங்களைப்பற்றி மீண்டும்மீண்டும்
பேசியும் எழுதியும் அவற்றை மறக்கவியலாத படைப்புகளாக மாற்றிய அறிஞர்களை நினைக்காமல்
இருக்கமுடியாது. அவ்வகையில் சிலப்பதிகாரத்துடன் இணைந்து நீண்ட காலமாக நம் நெஞ்சில்
பதிந்துபோயிருக்கும் ஒரு பெயர் ம.பொ.சி. அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களின்
பட்டியலில் சிலப்பதிகாரத்தைப் பற்றிய புத்தகங்கள் மட்டும் இருபதுக்கும் மேலானவை. கம்பராமாயணம்,
திருக்குறள், வள்ளலார், பாரதியார், காந்தியம் பற்றியும் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
தனது அரசியல் போராட்டங்களைப்பற்றி விரிவான வகையில் பதிவு செய்திருக்கிறார். வரலாற்றின்
அழுத்தமான தடங்களை அதன் பக்கங்களில் காணமுடியும்.