கடந்த நூற்றாண்டில் இருபதுகளின் தொடக்கத்திலேயே காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகள் தோற்றுவித்த எல்லா இயக்கங்களிலும் கலந்துகொண்டவர் ஆக்கூர் அனந்தாச்சாரி. நீல் சிலை அகற்றும் சத்தியாகிரகம் ,கள்ளுக்கடை மறியல், அந்நியத்துணி புறக்கணிப்பு, கதர்ப்பிரச்சாரம், உப்பு சத்தியாகிரகம், சைமன் குழு எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என தமிழகத்தில் நடைபெற்ற எல்லாப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார் அவர். அரசு வழங்கிய தண்டனையை ஏற்று இருபது முறைகளுக்கும் மேல் சிறைக்குச் சென்று திரும்பிய் அனுபவம் அவருக்கு உண்டு.