24.11.1919 அன்று தில்லியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து உற்சாகத்துடன் பங்கேற்ற கிலாபத் மாநாட்டில்தான் காந்தியடிகள் முதன்முதலாக ஒத்துழையாமை என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். பிறகு தொடர்ச்சியாக நண்பர்களுடன் உரையாடி ஒத்துழையாமையை ஒரு கொள்கைத்திட்டமாக உருவாக்கினார். அரசு அளித்த பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் உடனடியாகத் துறத்தல், ஊதியம் பெறும் அரசு பதவிகளிலிருந்தும் போலீஸ் இராணுவச் சேவையிலிருந்தும் வெளியேறுதல், சட்டசபையைப் புறக்கணித்தல், வரி கொடுக்க மறுத்தல் போன்ற அம்சங்களுக்கு அத்திட்டத்தில் கூடுதலான அழுத்தத்தை அவர் அளித்தார். தம் உரைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து அந்த அம்சங்களை வலியுறுத்தினார். காந்தியடிகளின் திட்டத்துக்கு பொதுமக்களில் ஒரு சாரார் ஆதரவைத் தெரிவிக்க, மற்றொரு சாரார் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தை சட்டமன்றங்களுக்குச் செல்வதற்கு தடை இல்லாத வகையில் மாற்றவேண்டும் என்பது ஒரு முக்கியமான கோரிக்கையாக எங்கெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.