உமா மகேஸ்வரியை
ஒரு கவிஞராகவே நான் முதலில் அறிந்துவைத்திருந்தேன். நான் எழுதி வந்த கணையாழி இதழில்
அவரும் அடிக்கடி எழுதி வந்தார். ‘எனது நதி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையொன்று
என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. நதியையும் ஒரு பெண்ணின் புடவையையும் பல்வேறு
நிலைகளில் ஒப்புமைப்படுத்தியபடி செல்லும் அக்கவிதை. சின்னஞ்சிறு வயதில் அம்மாவின் புடவையென
அலையோடியிருக்கிறது நதி. பருவ வயதில் ஓரம் தைத்த தாவணியாக உருவம் மாறிக் கிடக்கிறது.
திருமணமாகி வேறு திசைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கும் தருணத்தில் நூலிழை பிரிந்த
கந்தலாகக் கிடக்கிறது. ஒருபுறம் காலம் ஒரு சிறுமியை திருமணம் முடித்த பெண்ணாக வளர்ந்து
நிற்கவைக்கிறது. மறுபுறத்தில் அதே காலம் அலைகளோடிய நதியை நீரோட்டம் இல்லாத சிறு குட்டையாகச்
சிறுக்க வைத்திருக்கிறது. இந்தக் கவிதையை இன்னும் என் நினைவில் பதிந்திருப்பதற்குக்
காரணம் நதியைக் குறிப்பிட உமா மகேஸ்வரி ’அம்மாவின் புடவை’ என கையாண்டிருக்கும் உவமை.
எந்த நதியைப் பார்த்தாலும் அந்த உவமை ஒருகணம் என் மனத்தில் எழுந்து மறையும்.