இலட்சுமிபுரத்தையும்
இந்திரா நகரையும் ஒரு பூங்காதான் இணைக்கிறது அல்லது பிரிக்கிறது என்று
சொல்லவேண்டும். புல்தரை இல்லாத ரொம்பவும் வறட்சியான பூங்கா. சுற்றுச்சுவரையொட்டி
ஆறேழு மரங்கள். சுற்றுப் பாதையையொட்டி பத்து சிமெண்ட் பெஞ்சுகள். அவற்றில் மூன்று
பெஞ்சுகளுக்கு முதுகு கிடையாது. சிலுவைபோல வெறும் கம்பிகள்மட்டுமே
நீட்டிக்கொண்டிருக்கும். இரண்டு பெஞ்சுகள் பொக்கையும் பொறையுமாக இருக்கும்.
அவற்றில் உட்கார்வது எளிது. எழுந்திருக்கும்போது கவனமாக இல்லையென்றால் எங்கேயாவது
சிக்கிக்கொள்ளும் புடவையோ வேட்டியோ கிழிந்துபோவதற்கான வாய்ப்புகள் அதிகம்.