வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமே “கைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு வரியா?” என்று கேட்டாள் அம்மா. “சரிம்மா” என்றபடி தோட்டத்துப்பக்கம் சென்று பானையிலிருந்த தண்ணீரில் கைவைத்தேன். பக்கத்தில் வேலியோரமாக ஒரு சின்னஞ்சிறு புளியங்கன்று விரல்நீளத்துக்கு பச்சைப்பசேலென நின்றிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதன் வேர்ப்பகுதியில் கோழிகளால் சீய்க்கப்பட்ட பள்ளங்களை காலாலேயே மண்ணை இழுத்துத்தள்ளிச் சரிப்படுத்தினேன். வேகவேகமாக அது வளர்ந்து திசையெங்கும் கிளைவிரித்தபடி அடர்ந்து நிற்கிற காலம் விரைவில் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ”கைகால கழுவறதுக்கு எவ்வளோ நேரம்டா? சட்டுசிடுக்குனு வர தெரியாதா? வெளக்கு வைக்கற நேரத்துல அனுப்பாதன்னு எத்தன தரம் சொன்னாலும் புத்தி வராதா ஒனக்குனு அவருகிட்ட திட்டு வாங்கவைக்கறதே ஒனக்கு வேலயா போச்சி. ஒரு தலச்சம்புள்ளயாட்டமா நீ நடந்துகிற?” என்று உச்சத்துக்குச் செல்லும் அம்மாவின் குரல் மண்ணுலகத்தைநோக்கி என்னை இழுத்தது. ”தோ, வந்துட்டம்மா” என்றபடி வேகவேகமாகத் திரும்பி, ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்துப் பருகிவிட்டு கடைக்குக் கிளம்பினேன்.