கல் அடுப்பில் ஏற்றப்பட்டிருந்த புதுப்பானையில் கொதித்து நுரைத்துவரும் பொங்கலைக் கரண்டியால் கிளறிக்கிளறி பக்குவம் பார்த்தாள் பட்டம்மாள். கழுத்திலும் நெற்றியிலும் வழியும் வேர்வையை முந்தானையால் ஒற்றிஒற்றி துடைத்தபடி உஸ்உஸ் என்று ஊதி வெப்பத்தை ஆற்றிக்கொண்டாள். ஆட்டத்தின் உற்சாகத்தில் அடுப்பை நெருங்கிவரும் பிள்ளைகளை “பொங்கப்பானையில இடிச்சிக்கப் போறிங்கடா, அந்தப் பக்கமாக போய் ஆடுங்கடா பசங்களா” என்று அனுப்பினாள். கரும்புகை வளைந்துவளைந்து கட்டையான ஒரு கோடுபோல மேலே எழுந்தது. பானையின் கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருந்த மஞ்சள் கிழங்கின்மீது கருமை படிந்தது.