நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியபடி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான் குப்புசாமி. உண்மையில் பம்பரம் எடுப்பதற்காகத் தான் வெளியேயிருந்து உள்ளே வந்திருந்தான் அவன். அரைக்கணத்துக்குள் மனம் மாறிவிட்டது. பம்பரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டான். யாருமே இல்லாத சூழல் அவனுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தது. வா வா என்று யாரோ மனசுக்குள் கூப்பிடுகிற குரல் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான். பெரிய கீழ்த்தளத்தில் ஆள் சந்தடியே இல்லை. வெறும் தட்டுகளும் துணித்திரைகளும் இருந்தன. ஒரு மூலையில் செங்கற் குவியல். இன்னொரு மூலையில் மணல். கட்டிடத்திற்கு வெளியே பெண்கள் கல் அடுப்பில் சோறாக்கிக்கொண்டிருந்தார்கள். மெதுவாகத் தளத்தின் உள்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பொக்கையும் பொறையுமாக இருந்தது தரை. ஓர் இடத்தில் தண்ணீர் ஓடித் தேங்கியிருந்தது. இறங்கி நடந்ததில் கால்களில் சேறு அப்பியது. உதறிக்கொண்டான். சீ என்று வாய்விட்டுச் சொன்னான். மூலையில் படுத்திருந்த பூனை சட்டென்று இவன் பக்கம் திரும்பி முறைத்து விட்டு மீண்டும் சுருண்டது.