கலைப்படைப்புகள் என்பவை, வாழ்வில் ஒரு சின்னஞ்சிறிய தருணத்தை காலமெல்லாம் ஆழ்மனத்தில் எண்ணற்ற திசைகளில் விரித்துவிரித்து, அந்த உணர்வில் என்றென்றும் திளைக்கவைக்கின்றன. மெல்ல மெல்ல அவை படிமங்களாக உருமாறி ஆழ்மனத்தில் புதைந்துவிடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பல சங்கப்பாடல்கள் அத்தகு தருணங்களால் நிறைந்தவை. இன்று அந்த இடத்தை கவிதைகளும் சிறுகதைகளும் நாவல்களும் உருவாகி நிரப்பிக்கொண்டிருக்கின்றன. கவிதையில் அத்தருணம் ஒற்றை வைரக்கல்லாக அமைந்திருக்கிறது. சிறுகதையில் அத்தருணம் ஓர் அணிகலனில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாக ஒளிவீசுகிறது. நாவலில் அதே தருணம் ஒரு பெரிய நகைப்பெட்டிக்குள் மின்னும் வைரநகையாக சுடர்விடுகிறது.