‘பத்து நாளக்கி எவ்ளோத்தம் வேணுமோ அவ்ளோத்தம் எடுத்துக்க சுசிலா. என்னத்துக்கு
எல்லாத்தயும் எடுத்துக்னும் போயி மறுபடியும் சொமந்துக்னு வரணும். கொஞ்சமாக எடுத்துக்கயேன்’
ரொம்பவும் சாதாரணமாகத்தான் சொன்னான் துளசிங்கம். சொல்லி முடிக்கிற தருணத்தில் கூட மனைவியோடு பிரயாணப்படுகிற சந்தோஷமும், தனக்குப் பிரியமான ஊர்க்குப் போய் நிறைய வருடங்களாய் காணாத ஜனங்களைக் காணப் போகிற சந்தோஷமும், தனது புது மனைவியை அவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தப் போகிற கூச்சமுடனான சந்தோஷமும் புரள்கிற மனசோடுதான் இருந்தான். புருஷனோடு கிளம்புகிற உற்சாகமும் சந்தோஷமுமாய் அவள் இருக்கிற சந்தர்ப்பத்தில்தான் சொன்னான்.