Home

Showing posts with label ஆகஸ்டு - 15. Show all posts
Showing posts with label ஆகஸ்டு - 15. Show all posts

Sunday, 31 July 2022

எளிமையும் இலட்சியமும் – ஆகஸ்டு 15 நாவல் அறிமுகம்

 

இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக நம்மை ஆளும் பிரதமரையும் அமைச்சர்களையும் நாம் பலமுறை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களும் வழிகாட்டிகளும் அவர்களுடைய பிறந்தநாள் அன்றும் இறந்தநாள் அன்றும் மட்டும் நினைக்கப்படுகிறவர்களாக இன்றைய சூழல் மாறிவிட்டது. சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் புதிய தலைமுறையினர் தோன்றியுள்ளார்கள். சுதந்திரப்போராட்டத் தலைவர்களின் பெயர்களை படம்பார்த்துக்கூட சொல்லத் தெரியாத அளவுக்கு காலம் மாறிவிட்டது.  ஆயினும் ஓர் இலட்சியவாதியைப்பற்றிய செய்தி இன்றும்கூட நம் மனசாட்சியைத் தொட்டு அசைக்கும் சக்தியுள்ளதாகவே இருக்கிறது.  ஒரு மின்னலைப்போல அது நம்மைத் தாக்கித் திணறடித்துவிட்டு மறைந்துபோகிறது.