அப்ரென்டிசாக இருக்கும் போதெல்லாம் காஷுவல் லீவு எடுக்கமுடியாது. அட்டென்டன்ஸ் போய்விடும். தேவைக்கு ஒருநாள் இரண்டுநாள் குறைச்சலாய் இருந்தாலும் பரீட்சைக்குப் போகமுடியாது. கஷ்டம். அடுத்த பரீட்சைக்குத்தான் அனுப்புவார்கள். அடுத்த பரீட்சைக்கு ஒரு வருஷம் ஆகும். வருஷ வருஷமாய் காத்திருப்பது ரொம்ப சிரமம். காத்திருக்கிறமாதிரி வீட்டு நிலைமை சரியில்லை. அதனால்தான் லீவ் எதுவும் இல்லாமல் மானேஜரிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்திருந்தான் தங்கராசு. ‘இதோட மூணு பர்மிஷன் ஆய்ட்டுது மிஸ்டர். அடுத்த தரம் வரக்கூடாது. இப்பவே சொல்லிட்டன்’ என்று மிரட்டிய பிறகுதான் இந்தப் பர்மிஷனைக்கூடத் தந்திருந்தார் மானேஜர்.