1966-1977, 1980-1984 ஆகிய இரு காலகட்டங்களில் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஆட்சி புரிந்த இந்திரா காந்தியின் பெயரை நாம் எப்படி நினைவில் வைத்திருக்கிறோம் என்னும் கேள்வியிலிருந்து தொடங்கலாம். வங்கிகளை நாட்டுடைமையாக்கியவர், மன்னர் மானியங்களையும் சலுகைகளையும் ஒழித்தவர், பங்களாதேஷ்
உதயத்துக்காக பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர், தேசம் தழுவிய நெருக்கடி நிலையை அறிவித்து கட்சி பேதமின்றி தம்மை எதிர்த்தவர்கள் அனைவரையும் விசாரணையின்றி சிறையில் அடைத்தவர், பொற்கோவில் வளாகத்துக்குள் ராணுவ நடவடிக்கையை அனுமதித்தவர் என்னும் விடைகளையே பெரும்பாலானோர் சொல்லக்கூடும். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஆனால் அவற்றையெல்லாம் கடந்த இன்னொரு உண்மை உண்டு. அது அவர் ஒரு மிகச்சிறந்த இயற்கையார்வலர் என்பதும் இந்தியாவின் இயற்கைவளத்தைக் காப்பாற்ற அவர் முனைப்போடு பாடுபட்டார் என்பதுமான உண்மை.