பேருந்து நிறுத்தத்தில் எலும்பும் தோலுமாக ஒரு பசு நின்றிருந்தது. வெள்ளைத்தாளில் திட்டுத்திட்டாக கரிய மையைச் சிந்தியமாதிரி இருந்தது அதன் நிறம். அதன் வாயிலிருந்து நூல்போல எச்சில் வழிந்தது. பசுவுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவன் அதன் கழுத்தின் இருந்த கயிற்றை இழுத்து அந்த இடத்திலிருந்து விலக்கி ஓட்டிச் செல்ல முயற்சி செய்தான். பசு அசைந்துகொடுக்காததால் நாக்கைத் தட்டி ஓசையெழுப்பியபடி கொம்பைப் பிடித்து இழுத்தான். பிறகு வாலை முறுக்கிவிட்டு பின்பக்கம் முதுகில் கைவைத்து தள்ளினான். ஆனால் பசு ஒரு அங்குலம் கூட நகரவில்லை. நின்ற இடத்திலேயே நின்றபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தது.