Home

Showing posts with label இருவாட்சி பொங்கல் மலர். Show all posts
Showing posts with label இருவாட்சி பொங்கல் மலர். Show all posts

Thursday, 22 January 2015

ஒளிவட்டம்


போ போ, வேற ஊடு போயி பாரும்மா. ஒரு தரம் சொன்னா காதுல உழாதா? இங்கயே நின்னுகினு தொணதொணக்காத. போஎன்று பிச்சைக்காரியை விரட்டும் தாத்தாவின் குரல் நடுக்கூடம்வரை கேட்டது. அப்போது ஆங்கிலப் புத்தகத்துக்கு நடுவில் வைத்திருந்த நாடக நோட்டீஸ்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். எல்லாமே சித்தப்பா கொண்டுவந்து கொடுத்தவை. ஒருகணம் கண்களை உயர்த்தி வாசல்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் நோட்டீஸ்கள்மீது பார்வையைத் தாழ்த்தினேன். பள்ளிக்கூடப் பாடங்களைவிட அவற்றின்மீதுதான் எனக்கு ஆசை அதிகம். அவற்றை நான் உயிருக்குயிராக நேசித்தேன். ஆயிரம் முறை பார்த்த நோட்டீஸைக்கூட ஆயிரத்தோராவது முறை பார்க்கும்போது புதுசாகப் பார்ப்பதுபோலவே தோன்றும். அவற்றில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விதவிதமான புராணப் பாத்திரங்களின் படங்கள் என்னுடன் பேசுவதுபோலவும் என்னைப் பார்த்துப் புன்னகைப்பதுபோலவும் இருக்கும். அவர்கள் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தோற்றத்தைப் பார்த்ததுமே, அந்தத் தோற்றத்துக்குப் பொருத்தமான உரையாடல்களை புதுசுபுதுசாக மனம் உருவாக்கும். கற்பனையிலேயே அதை எனக்குள் பேசிப் பார்த்துக்கொள்வேன்.
சைக்கிள் மணிச்சத்தத்தால் என் கற்பனை கலைந்தது. மீண்டும் கண்களை உயர்த்தி வாசல் பக்கமாகப் பார்த்தேன். தபால்காரர் கொடுத்த கடிதத்தை தாத்தா திண்ணையிலிருந்து எழுந்துபோய் கைநீட்டி வாங்கிக்கொள்வது தெரிந்தது. கடிதத்தை அவர் முன்னும் பின்னும் திருப்பித்திருப்பிப் பார்ப்பதையும் கவனித்தேன். பிறகு எப்படியோ என் கவனம் மீண்டும் நோட்டீஸ்கள்மீது குவிந்துவிட்டது. அப்போது திண்ணையிலிருந்து தாத்தா அழைத்ததை காதுகள் உள்வாங்கிக்கொண்டாலும் மனம் உள்வாங்கிக்கொள்ளவில்லை.  நாடக நோட்டீஸ்களின் விதவிதமான வண்ணத்திலும் படங்களின் வசீகரத்திலும் மனம் லயித்திருந்தது.