உலகின் மிகப்பெரிய இலக்கிய மேதை தஸ்தாவெஸ்கி. அவருடைய குற்றமும் தண்டனையும், கரம்சேவ் சகோதரர்கள், சூதாடி, அசடன் ஆகிய நாவல்கள் இலக்கிய வாசகர்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவை. பலவிதமான ஏற்ற இறக்கங்களும் கொண்டது அவருடைய வாழ்க்கை. அமைதியென்பதே இல்லாத அளவுக்குச் சதாகாலமும் துக்கங்களாலும் சோதனைகளாலும் துரத்தப்பட்டபடி இருந்த மனிதர் அவர். எல்லாச் சுமைகளுக்கிடையேயும் அவர் உறுதியாக மூழ்கிப் பணிபுரிந்த ஒரே களம் இலக்கியத்துறை மட்டுமே. தன் மனக்கொந்தளிப்பையெல்லாம் கொட்டித் தீர்க்கவும் அவற்றை மையப்படுத்தித் தன்னையும் தன் வாழ் வையும் பரிசீலித்துக்கொள்ளவும் ஒரு வடிகாலைப்போல அவர் பெரிதும் நம்பிச் செயல்பட்டது இலக்கியக் களத்தில் மட்டுமே என்று தோன்றுகிறது. அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையே மையமாகக் கொண்டு ஒரு நாவல் எழுதுவது என்பது சுவாரஸ்யமான ஒரு சவாலாகவே இருக்கும். மலையாள எழுத்தாளர் பெரும்படவூர் ஸ்ரீதரன் என்னும் எழுத்தாளர் அச்சவாலை முழுஅளவில் ஏற்றுக்கொண்டு ‘ஒரு சங்கீதம் போல ‘ என்னும் படைப்பை எழுதியுள்ளார். அதன் சுவை சற்றும் குறையாத அளவில் சிற்பி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தில் உள்ள குறிப்புகள் இப்படைப்பை நாவல் என்று சொன்னாலும் இதை அழகான நீள்கதை என்றே சொல்லவேண்டும்.