லியோ தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, மக்சீம் கார்க்கி போன்றோர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியில் எழுதிய மற்றொரு முக்கிய எழுத்தாளர் விளாதிமிர் கொரலேன்கோ. அவர் 15-07-1853 அன்று உக்ரேனியாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள ஜித்தோமிர் என்ற சிறு நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் வழக்கறிஞர். ஆனால் கொரலேன்கோ தன் சிறுவயதிலேயே அவரை இழந்துவிட்டார். ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்திச் செல்ல கொரலேன்கோவின் தாயார் மிகவும் சிரமப்பட்டார். பசியும் பட்டினியுமாக நாட்கள் கழிந்தன. அச்சூழலில் கொரலேன்கோவால் தன் கல்வியைச் சரியாகத் தொடரமுடியவில்லை. இருபது வயதிலேயே கல்லூரியிலிருந்து விலகிவிட்டார். கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்துக்குத் துணையாக இருந்தார்.