நான்கு ஆண்டு கால இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு சுகுமாரனுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தயாரிப்பாளரின் திடீர் மரணத்தின் விளைவாக, அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்குப் பிறகு வேறொரு வாய்ப்பும் அவனைத் தேடி வந்தது. ஏறத்தாழ நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்துமுடிந்திருந்த சூழலில், திடீரென தயாரிப்பாளர் சிறைக்குச் செல்ல நேர்ந்ததால், அந்தப் படமும் கைவிட்டுப் போனது. அவனிடம் எல்லாத் திறமைகளும் இருந்தன. யாரும் ஒரு குறையும் சொன்னதில்லை. ஆயினும் எதிர்காலத்தை நோக்கி அவனால் ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை.