Home

Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Thursday, 25 June 2015

கலையைத் தேடி வந்த கௌரவம்

தேசிய அளவில் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படும் ஞானபீட விருது நம் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தனுக்குத் தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஞானபீட விருதைப் பெற்ற சிவராம காரந்த், தகழி சிவசங்கரன் பிள்ளை, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், மகாஸ்வேதா தேவி, குர் ஆதுலின் ஹைதர், நிர்மல் வர்மா போன்ற மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தனுடைய பெயரும் இடம்பெறுவது தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமாகும். 

அடித்தட்டு மக்களுடைய வாழ்வியக்கங்களின் சித்திரங்களை எழுத்தில் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவருடைய எழுத்தும் உரையாடலும் விவரணை முறையும் அந்த அழகியல் தன்மைகளைக் கொண்டவையாகவே விளங்குகின்றன. பிச்சைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், ஆண்டிகள், சாமியார்கள், சாப்பாட்டுச்சுமை தூக்கிகள், தள்ளுவண்டிக்காரர்கள், மேஸ்திரிகள், சித்தாள்கள், விடுதிகளில் வேலை செய்பவர்கள், விலைமாதர்கள், நாடகக்காரர்கள், போதையில் திளைப்பவர்கள் என வாழும் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களுடைய வாழ்வியக்கச் சித்திரங்களையே ஜெயகாந்தன் தன் படைப்புகளில் தீட்டி வைத்திருக்கிறார். இவர்கள் வாழும் வேட்கை கொண்டவர்கள். பெரிதும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுடைய கருத்தியல்களையும் விழுமியங்களையும் கதைகள் மூலம் கண்டடைய முயற்சி செய்தவர் ஜெயகாந்தன்.