எங்கள் அலுவலகத்தில் சதாசிவராவ் என்பவர் வேலை செய்துவந்தார். அவருடைய அப்பாவின் பெயர் சாம்பசிவராவ். அவர் சுதந்திரப்போராட்டங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றவர். ஒரு காலத்தில் அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சதாசிவராவுக்கு ஏழு வயது. மாதத்துக்கு ஒருமுறை சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு வந்து சிறைச்சாலையில் கைதிகள் சந்திப்பு நேரத்தில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டுத் திரும்பும் அம்மாவோடு சதாசிவராவும் வருவார். அம்மாவிடம் பேசுவதைவிட சிறுவனான அவரிடம்தான் அவர் அதிக நேரம் பேசுவது வழக்கம்.