அன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின் சில முக்கியமான ஆக்கங்களை தமிழில் மொழியாக்கம் செய்து வழங்குகிறவராகவும் பிரெஞ்சு மொழியின் இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிமுகம் செய்பவராகவும் அவர் திகழ்ந்து வந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்ல, குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியராகவும் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். திண்ணை இணையஇதழ் அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.