மனிதர்களை
இருவகையாகப் பிரிக்கலாம். தனக்கு நேரும் சின்னச்சின்ன
கவலைகளையும் துன்பங்களையும்கூட மிகப்பெரிதானவையாக நினைத்து மீளாத துயரத்தில் ஆழ்ந்து
திகைத்துச் சோர்வடைபவர்கள் ஒருவகை. கடுமையான
துன்பங்களால் சூழ்ந்தபோதிலும் சிறுகச்சிறுக அவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்குத்
திரும்பி தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தினசரி வாழ்வைத் தொடங்குகிறவர்கள் இன்னொருவகை.
ஒருவர் இயற்கையிலிருந்தும் காலநகர்விலிருந்தும் கிடைக்கக்கூடிய ஆறுதலையும் மருந்தையும்
பெற்று தன் மனப்புண்ணை ஆற்றிக்கொள்கிறார். இன்னொருவர் அந்த ஆறுதலையும் மருந்தையும்
ஏற்றுக்கொள்ளும் ஊக்கமில்லாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிடுகிறார். மனிதர்கள்மட்டுமே
இருவகையாகப் பிளவுண்டு கிடக்கிறார்களே தவிர, இயற்கையும் காலமும் எவ்விதமான ஏற்றத்தாழ்வும்
இல்லாமல் தன் கருணையையும் ஆறுதலையும் ஒரே அளவிலேயே அனைவருக்கும் வழங்குகின்றன. அவற்றின்
ஊற்றுக்கண்கள் ஒருபோதும் வற்றாதவை.