கதராடைகளை அணிந்து அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணித்தல், மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலும் அரசைப் புறக்கணித்தல், தேர்தலில் பங்கேற்காமல் சட்டசபையைப் புறக்கணித்தல் என மூன்றுவகையான புறக்கணிப்புகளை ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு செயல்திட்டமாக காந்தியடிகள் வகுத்தளித்தார். தொடக்கத்தில் அரசு அவருடைய குரலைப் பொருட்படுத்தவில்லை. ஆயினும் அவருடைய ஒத்துழையாமை இயக்கத்துக்கு தேசம் முழுதும் பெருகிய மக்கள் ஆதரவைக் கண்டு திகைத்த அரசு, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் கட்டுரைகளை எழுதியதாக காந்தியடிகள் மீது தேசதுரோகக் குற்றம் சுமத்தி 10.03.1922 அன்று கைது செய்து எரவாடா சிறையில் அடைத்தது. அவருக்கு ஆறாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாண்டுகளில் சிறையில் அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைந்தது. அவசரமாக குடல்வால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் அவர் 05.02.1924 அன்று விடுதலை செய்யப்பட்டார்.