Home

Showing posts with label கிராம ராஜ்யம். Show all posts
Showing posts with label கிராம ராஜ்யம். Show all posts

Sunday, 22 May 2022

மீரா பெஹன் : இமயத்தின் திருமகள்

 

1921ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் ஜெர்மனியின் மீது ஒருவித வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த சூழலில், அதே இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஜெர்மனியின் இசைக்கலைஞரான பீத்தோவனின் இசையில் மனம் பறிகொடுத்து, மீண்டும் மீண்டும் அந்த இசையைக் கேட்பதில் பொழுதுகளைக் கழித்துவந்தார். பீத்தோவனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக ஓராண்டு காலம் செலவழித்து ஜெர்மன் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். பீத்தோவனைப்பற்றி அதுவரை ஜெர்மன் மொழியில் வெளிவந்திருந்த நூல்களையும் அவருடைய சமகால ஆளுமைகள் எழுதிய பல்வேறு நினைவுக்குறிப்புகளையும் கடிதங்களையும் தேடித்தேடிப் படித்தார். இறுதியாக பீத்தோவன் பிறந்த ஊரான வியன்னாவுக்குச் சென்று தனிமையில் தன்னை மறந்த நிலையில் பீத்தோவன் நினைவுகளிலும் இசையிலும் சிறிது காலம் மூழ்கியிருந்தார். தன் தேடலின் தொடர்ச்சியாக பீத்தோவன் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு பிரெஞ்சு எழுத்தாளரான ரொமன் ரொலான் எழுதிய பத்து தொகுதிகளைக் கொண்ட ழான் கிரிஸ்தோபிஃப் என்னும் நாவலைப் படித்தார்.