கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நாராயணகுரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நடராஜ குரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நித்ய சைதன்ய யதி. குரு சீடர் உரையாடல் வழியாக ஒருபோதும் வற்றாத காட்டாறாக சிந்தனை தன் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறது. அடிப்படையில் நாராயண குரு வேதாந்தி. சங்கரரின் அத்வைத நோக்கை விரிவாக்கியவர். அனைத்து தரிசனங்களையும் தன் தனித்துவம் கொண்ட நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைத்து ஓர் இணைவைக் கொண்டுவந்தது அவருடைய பெரும்சாதனை. நாராயாண குருவின் அத்வைத சமன்வய நோக்கை மேலைத் தத்துவங்களுடன் இணைத்து வளர்த்தெடுத்தவர் அவருடைய மாணவர் நடராஜ குரு. அவருடைய மாணவர்களில் ஒருவரான நித்ய சைதன்ய யதி உயர்பௌதிகம், உளவியல் பின்னணியில் அப்பார்வையை இன்னும் விரிவாக்கிவைத்தார்.