சிம்னி விளக்கு வெளிச்சத்தில் பாய் மேலேயே துணியை விரித்துப் போட்டு உட்கார்ந்த வாக்கிலேயே எக்கிஎக்கி சுண்ணாம்புக் கட்டியால் அடையாளம் செய்வதும் அடையாளக்கோட்டின் மேலேயே நடுவில் நட்போல்ட் போட்டு முடுக்கிய கத்திரிக்கோலால் க்ரீக் க்ரீக் க்ரீக் என்று வெட்டுவதுமாய் இருந்த கோபாலைப் பார்த்தபோது சுந்தரிக்குப் பாவமாய் இருந்தது. நிமிஷத்துக்கொருதரம் நடுமரை தொளதொளத்துவிடுகிற கத்தரிக்கோலைத் திரும்பத் திரும்ப முடுக்கிக்கொண்டு வெட்டுகிற கோபாலுக்கு இப்போதே ஓடிப்போய் ஒரு புதுக் கத்திரிக்கோல் வாங்கி வந்து கையில் தரவேண்டும் என்று ஆசைப்பட்டாள் சுந்தரி.